புனைந்திருந்தான். தமிழ் வளர்ச்சிக்கு அவன் ஆற்றிய பணிகளின் சிறப்பை இவ் விருது எடுத்துக்காட்டுகின்றது. இரண்டாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் இறுதியாண்டுகளில் மத்திய ஆட்சியும், மாகாண ஆட்சியும் தளர்ச்சியுறலாயின. குறுநில மன்னர்கள் சோழனின் மேலாட்சியினின்றும் நழுவத் தொடங்கினர். கிராமத்து ஆட்சி முறைகளும், ஊர் வாரியங்களும் எவ்விதமான மாறுதல்களுக்கும் உட்படவில்லையாயினும், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடும் கோன்முறையும் முதலாம் இராசராசன் காலத்தில் பெற்றிருந்த உறுதியையும் ஒழுங்கு முறையையும் இழந்துவிட்டன. இராசராசனின் ஆட்சி கி.பி. 1173ஆம் ஆண்டுடன் முடிவுற்றது. அவனுக்குப்பின் இரண்டாம் இராசாதிராசன் பட்டமேற்றான். இவன் இரண்டாம் இராசராசனின் மகன் அல்லன் ; விக்கிர சோழனுடைய பெண் வயிற்றுப்பேரர்களுள் ஒருவனாவன். இரண்டாம் இராசாதிராசன் (கி.பி. 1163-1179) இரண்டாம் இராசராசன் காலத்திலேயே பாண்டி நாட்டில் உள்நாட்டுப் போர் ஒன்று மூண்டது. பராக்கிரம பாண்டியன் என்பவனும் குலசேகர பாண்டியன் என்பவனும் அரசுரிமையை நாடினர். பராக்கிரம பாண்டியன் என்பவன் சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவின் படைத்துணைக்காக விண்ணப்பம் அனுப்பியிருந்தான். காலத்தில் படைகள் வந்து அவனுக்கு உதவவில்லை. அதற்குள் குலசேகர பாண்டியன் பராக்கிரம பாண்டியனையும் அவனுடைய குடும்பத்தினர் சிலரையும் கொன்று மதுரையைக் கைப்பற்றினான். சிங்களப்படை இலங்காபுரன் என்பவன் தலைமையில் மதுரையை அடைந்தது. மதுரைக்குள் நுழைந்து இப் படைத்தலைவன் பல இடங்களையும் அழித்தான். பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியனை அரியணை ஏற்றினான். ஆனால், சோழரின் துணையை நாடிய குலசேகரனுக்கு நற்காலம் பிறந்தது. சோழர்கள் அவனை மீண்டும் பாண்டி நாட்டு மன்னனாக முடிசூட்டினர். அஃதுடன் அமையாமல் சோழர்கள் சிங்களத்தின்மேல் படையெடுத்துச் சென்றனர். சந்தர்ப்பவாதியான பராக்கிரமபாகு என்பான் குலசேகர பாண்டியனுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொண்டான். குலசேகரன், சோழர் தனக்குச் செய்த நன்றியைக் கொன்று அவர்களையே எதிர்க்கலானான். சோழர்கள் அரசியல் சூழ்ச்சியில் பாண்டியருக்கு எவ்வகையிலும் பிற்பட்டவர்கள் அல்லர். அவர்கள் வீர |