அனைத்தும் மண்ணில் புதையுண்டு போனதாகவும் தெரிகின்றது. அல்லது தோன்றிய ஒவ்வொரு நகரும் எதிரிகளால் அழிக்கப் பட்டிருக்கக் கூடுமென்றும் சிலர் கருதுகின்றனர். மொகஞ்சதாரோவிலும், ஹாரப்பாவிலும் ஊருக்குப் புறத்தே கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருந்தன. அக் கோட்டைகளுக்குள் மன்னரின் மாளிகைகளும், பெரிய பெரிய நீராடுங்குளங்களும், நேருக்கு நேரான சாலைகளும், பெரிய வீடுகளும், நெற்களஞ்சியங்களும் அமைக்கப் பட்டிருந்தன. கோயில் குருக்கள் குடியிருப்பதற்காகவே தனித்தனி வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொகஞ்சதாரோவில் உள்நாட்டு வெளிநாட்டு வாணிகங்கள் செழிப்புடன் நடைபெற்றுவந்தன. அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுத்தானியங்கள் களஞ்சியங்களில் சேர்ப்புக் கட்டி வைக்கப்பட்டன. உலோகங்களும் நவமணிகளும் அயல்நாடுகளிலிருந்துதாம் இறக்குமதியாயின. மொகஞ்சதாரோ குடிமக்கள் அழகழகான மட்பாண்டங்கள். மண்பொம்மைகள், வெண்கலச் சிலைகள் ஆகியவற்றைச் செய்வதற்குக் கைவன்மையும் கலையுணர்ச்சியும் வாய்க்கப் பெற்றிருந்தனர். களிமண் முத்திரைகளும் செப்பேடுகளும் இந் நகரில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. முத்திரைகளிலும் செப்பேடுகளிலும் பொறிக்கப் பெற்றுள்ள எழுத்துகள் இன்னமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற உண்மை இன்னும் திருத்தமாக விளக்கப்படவில்லை. செப்பேடுகளில் ஒரு வரி இடம்-வலமாகச் செல்லுகின்றது; அடுத்த வரி வலம் இடமாக வருகின்றது. இவ்வெழுத்துகள் சித்திர முறையும் ஒலி முறையும் இணைந்து பிறந்தவை என்று ஆய்வாளர் ஊகிக்கின்றனர். இச் சிந்துவெளி மொழியில் மொத்தம் முந்நூறு குறிகள் காணப்படுகின்றன. அவற்றுள் இருநூற்றைம்பது குறிகள் அடிப்படையானவை. ஏனையவை சார்பு குறிகள். சிந்துவெளி மக்களின் சித்திர எழுத்துகளில் மறைந்துள்ள செய்திகள் யாவை என்பதை அறிந்து கொள்ள வரலாற்று ஆய்வாளர்கள் விஞ்ஞானத்தின் துணையை நாடிவருகின்றனர். பல அறிஞர்கள் இந்த எழுத்துகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பல்வேறு கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளனர். ஒருசாரார் சிந்துவெளி மொழியானது பண்டைய தமிழ் வடிவமே என்று கூறிவருகின்றனர். இவர்களுள் முதன்மையானவர் ஹீராஸ் பாதிரியார் ஆவார். ஹீராஸ் பாதிரியார் தம் கொள்கைக்குச் சார்பாகப் பல சான்றுகளைக் காட்டியுள்ளார். இவர் இவ்விரு மொழிக்குமிடையே |