பல ஒற்றுமைகளைக் கண்டார். இவருடைய கொள்கையைச் சில ஆய்வாளர் பொருத்தமற்றதெனப் புறம்பே ஒதுக்கினர். ஆனால், இக் காலத்தில் விஞ்ஞானமுறையில் நடை பெற்றுவரும் ஆராய்ச்சிகள் பாதிரியாரின் கொள்கையை மெய்ப்பித்து வருகின்றன. ரஷியா, பின்லாந்து ஆகிய நாட்டு ஆய்வாளர் சிலர் மொகஞ்சதாரோ மொழியை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து அம்மொழி திராவிட மொழியின் தொடக்க உருவமேயாம் என்று முடிவு கட்டியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகளை ஆராயும் பணியில் முனைந்துள்ள திரு. ஐ. மகாதேவன் அவர்களும் சிந்துவெளி மொழிக்கும் தமிழ்மொழிக்குமிடையே நெருங்கிய தொடர்பைக் காண்கின்றார். சிந்துவெளி எழுத்துகளுக்குத் தாம் ஒரளவு விளக்கங் கண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அவ்வெழுத்துகள் சித்திரமும் ஒலிக்குறிப்பும் இணைந்து வடிவமைப்புப் பெற்றிருப்பதால் இன்றைய தமிழில் அவையனைத்தையும் பெயர்த்தெழுத வியலாதவராயுள்ளார். தம் கருத்துக்குச் சார்பாகத் திரு. ஐ. மகாதேவன் கீழ்க்காணும் சான்றுகளை எடுத்துக்காட்டுகின்றார். 1. மொகஞ்சதாரோ முத்திரைகளின்மேல் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளுக்கும் கி.மு. இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துகளுக்குமிடையே பல இயைபுகள் காணப்படுகின்றன. இவ் வெழுத்துகள் வெளியிடும் செய்திகள் அனைத்துமே கடவுள் மாட்டுக் கொடுத்துக்கொள்ளும் விண்ணப்பங்களாக அமைந்துள்ளன. மொகஞ்சதாரோ முத்திரை எழுத்துகள் தெய்வ முறையீடுகளைப் போலக் காணப்படினும், இவற்றுக்கும் தமிழ்-பிராமி எழுத்துகளுக்கு மிடையே இணக்கம் ஏதும் இருப்பதாகத் திட்டமாகக் கூறுவதற்கில்லை. அப்படிக் கூறுவதற்குத் திரு. மகாதேவன் காட்டும் சான்று போதாது எனத் தோற்றுகின்றது. 2. தென்னிந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருங்கற் புதைவுகளில் கிடைத்துள்ள பானையோடுகளின்மேல் வரையப்பட்டுள்ள கீற்றோவியங்களும் சிந்துவெளி ஓடுகளின்மேல் வரையப்பட்டுள்ள கீற்றோவியங்களும் ஒரேவிதமாகக் காணப்படுகின்றன. இங்கு ஒன்று நாம் நினைவில் கொள்ளவேண்டும். தென்னிந்தியப் பெருங்கற் புதைவுகளைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும் |