வண்டியிலேயே கிடாய்க்குட்டி ஏற்றிவந்து சந்திதோறும் கிடாய் வெட்டினதுகொண்டு இரண்டு ஊராரும் இருந்து இவனுக்குக் ‘கலங்காத கண்டக் கோன்’ என்ற பட்டமுங் கொடுத்து, கோயிலிலே ஒடுக்கமும் கொடுத்து, இந்தப் பட்டமும், இந்த ஒடுக்கமும் இவனே அனுபவித்துப் போதக் கடவனாகவும், மேலும் திருநாளுக்குக் கிடாய்க்குட்டியும் இடுவனாகவும்...’ என்று கூறுகின்றது. மத்திய அரசாங்கம் வலுவானதாக இல்லாததால் அந்நாள்களில் தடியெடுத்தவன் தண்டக்காரன் என்று கண்ட கண்ட இடமெல்லாம் பாளையக்காரர்களும், நிலக்கிழார்களும் அரசு செலுத்திவந்தார்கள். ஆகவே, நாட்டில் கொள்ளையும் கொலையும் மலிந்துகிடந்தன. நங்குபட்டி வட்டம் என்ற இடத்தில் இரு ஊராரிடையே பூசல் வளர்ந்துகொண்டிருந்தது. மாடு பிடித்துச் செல்வது, கத்தி கட்டாரிகளைக் கொண்டு எதிர்எதிர்க் கிராமத்து மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கண்டவர்களைக் கொல்லுவது ஆகிய கொடுங்குற்றங்களில் குடிமக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரு கிராமங்களிலும் இரத்த ஆறு பெருகிற்று. மக்கள் நூற்றுக்கணக்கில் கொலையுண்டு மாண்டு போனார்கள். எனவே, இரு கிராமத்துக் குடிகளும் ஒன்றுகூடித் தமக்குள் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு, தாம் மேற்கொண்டு சமாதானமாக வாழ்ந்து வரவேண்டுமென்றும், பகைமையை மறந்து நட்புக்கொள்ள வேண்டுமென்றும், கோயிலுக்கு முன்பு வாக்குறுதி ஒன்று செய்துகொடுத்தனர்.43 வேறு ஒரு கிராமத்தில் இரு படைவீரர்கள் திடீரெனத் தோன்றி இருபது குடிமக்களைப் படுகொலை செய்தார்கள். அவர்களுடைய சினத்துக்குக் காரணம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் செய்த கொடுங்குற்றத்துக்கு மூன்று மா நிலம் அவர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டதாக நெடுங்குடிக் கல்வெட்டு (1480) ஒன்று கூறுகின்றது.44 வேறு பல வியப்பூட்டும் பழக்கவழக்கங்களும் நாட்டில் பயின்று வந்ததற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. அரசு வழிகண்ட தேவன் என்னும் குறுநிலத் தலைவன் ஒருவனுடன் வலையர் உள்ளிட்ட குடிமக்கள் சிலர் அவனுக்கு ஒப்பந்தம் ஒன்று செய்து கொடுத்தனர் (1476).45 அதன்படி, ஆடி மாதங்களிலும், 43. I. P. S. No. 692 & 799. 44. I. P. S. No. 818. 45. I. P. S. No. 715. |