கால்களில் மரக்கட்டைகள் பூட்டிவிடுவார்கள். அவற்றை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டே நடந்து செல்லவேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு சிலரே மேற்கொண்டு தமிழ் நூல்களைப் பயில முனைந்தனர். அவர்களும் ஒழுக்க நூல்களையும், தோத்திர நூல்களையும், நிகண்டுகளையுமே பெரும்பாலும் கற்றுவந்தனர். அவர்கள் புராணங்கள், சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பயிலும் வாய்ப்புப் பெறுவதில்லை. அவர்கள் இலக்கிய இலக்கண ஆராய்ச்சியிலும் புகவில்லை. விஞ்ஞானம், வரலாறு, தத்துவம், உயர்கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்கள் பயிற்சி பெறுவதில்லை; ஓலைகளில் எழுதியிருந்தவற்றைப் படித்து வந்தனர். ஓலைகளின்மேல் எழுத்தாணியால் எழுதி வந்தனர். முதன்முதல் சிறுவர்களைப் பள்ளிக்கூடத்தில் வைப்பதனைச் ‘சுவடி தூக்குதல்’ என்பர். எழுதும் பனைஓலையை அழகாக வாரி, தொளையிட்டு வரிந்து கட்டுவது அக் காலத்தில் ஒரு கலையாகக் கருதப்பட்டது. ஆங்கிலேய அரசு நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக ஒரு திட்டம் வகுத்தது (1854). அதற்கு ‘ஆங்கிலக் கல்வித் திட்டம்’ என்று பெயர். மாவட்டங்களிலெல்லாம் தாய்மொழிப் பயிற்சிப் பள்ளிகள் திறக்கவும், கல்வி வாய்ப்பைப் பெருக்கவும், மாகாண அரசாங்கத்தில் கல்வித்துறை ஒன்று அமைக்கவும், சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் பல்கலைக்கழகங்கள் தொடங்கவும், சாதி, மத வேறுபாடின்றி எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் பொருள் உதவி வழங்கவும் அத் திட்டத்தில் வழிகள் வகுக்கப்பட்டன. பள்ளிகளில் கீழ்வகுப்புகளில் தமிழும், மேல்வகுப்புகளில் ஆங்கிலமும் பயிற்சி மொழியாக்கப்பட்டன. சென்னை அரசாங்கத்தில் கல்வித் துறை தொடங்கப் பட்டது; அதற்கு இயக்குநர் (Director of Public Instruction) ஒருவர் நியமிக்கப்பட்டார். முதன்முதல் இயக்குநராக நியமனமானவர் சர் அர்பத்நாட் (Sir A.J. Arbuthnot) என்பவர். அவர் பிறகு சென்னைக் கவர்னராகவும், சென்னை, கல்கத்தாப் பல்கலைக்கழகங்களின் உதவித் தலைவராகவும் (Vice Chancellor) பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் 1857 ஆம் ஆண்டில் XXVII ஆம் சட்டத்தின்கீழ்ச் சென்னையில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டது. செனெட் (Senate) என்ற ஆட்சிக் குழு அதன் நிருவாகத்தை நடத்தி வந்தது. தொடக்கத்தில் கலைகள், சட்டம், |