பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 501

     வடலூர் இராமலிங்க அடிகளார். அவருடைய பாடல்கள்
நெஞ்சையுருக்குவன; இனிய முழுமுழுச் சொற்களால் யாக்கப்பட்டன. இப்
பாடல்கள் ஒவ்வொன்றிலும் அன்பும், நெகிழ்ச்சியும், இன்பக் கசிவும்,
மெய்ம்மை ஒளியும் ததும்பி வழிவதைக் காணலாம். சொற்கோப்பு,
சொல்லடுக்கு, பல்வகை மெய்ப்பாடுகள், இசை வண்ணம் ஆகியவை இப்
பாடல்களின் சிறப்புகள்; பல கீர்த்தனைகளையும் பாடியுள்ளார். அகத்துறை
யமைந்த இங்கிதமாலை என்னும் நூல் புலவர்களின் இலக்கண இலக்கிய
அறிவுக்கு ஒரு கட்டளைக் கல்லாக அமைந்துள்ளது. ‘அருட்பெருஞ்சோதி
அகவல்’ என்னும் பாடல் அவருடைய மெய்யுணர்வு அனுபவங்களை
விளக்குகின்றது. இராமலிங்க அடிகளார் காலத்திலேயே வாழ்ந்திருந்து,
அவர்மேல் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளைப் பாடியவர் காரணப்பட்டுக்
கந்தசாமிப் பிள்ளை என்பவர். அவர் நல்ல இசைப் புலமை வாய்ந்தவர்.

     வடலூருக்கு அண்மையில் மேட்டுக்குப்பம் அல்லது சித்தி வளாகம்
என்னும் சிற்றூரில் 1874ஆம் ஆண்டு தை மாதம் பூசநாள் அன்று (1874
ஜனவரி 30) ஒரு குடிசைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டார். மீண்டும்
அவர் வெளியில் வந்ததை யாரும் காணவில்லை என்று அவர் காலத்தில்
தென்னார்க்காட்டு மாவட்டக் கலெக்டராக இருந்த கார்ஸ்ட்டின் (J.H.Garstin,
I.C.S.) என்ற ஆங்கிலேயர் கூறுகின்றார். ‘கூற்றம் குதித்தலும் கைகூடும்
நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு’ என்று திருவள்ளுவரும், ‘எழுகின்ற
தீயில் கற்பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடல் போம் அப்பரத்தே’
என்று திருமூலரும், ‘சித்தம் நிருவிகற்பம்; சேர்ந்தார் உடல் தீபம் வைத்த
கற்பூரம்போல் வயங்கும் பராபரமே’ என்று தாயுமானவரும் வகுத்த
இலக்கணத்துக்கு ஏற்ப இராமலிங்க அடிகளார்தம் உடல் ஒளி உடலாக மாற
இறையொளியில் கலந்துவிட்டார் என்பர்.

     சாதி, சமய, குல, கோத்திர வேறுபாடுகளையும், சமயப் பூசல்களையும்,
கண்மூடிப் பழக்கங்களையும் களைந்தெறிய முற்பட்டதற்காகச் சில
சமயவாதிகள் அவரை வெறுத்துத் தூற்றி வந்ததுண்டு. தமிழகத்தில்
முதன்முதல் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்னும் குரலை எழுப்பியவர்
அடிகளார்தாம்.

தமிழ் இலக்கியம்

     ஆங்கிலேயரின் திறமையான ஆட்சியின்கீழ் நாட்டில் அமைதி
நிலவிற்று; கலகங்கள் ஓய்ந்தன. இடையூறுகள் இன்றிக் குடிமக்கள்