பண்டைய நாள்களில் தென்னிந்தியாவுக்கும் மடகாஸ்கருக்கு மிடையே நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிகின்றது. தென்னிந்தியர் பலர் வாணிகத்தின் பொருட்டாகவே மடகாஸ்கருக்குச் சென்று குடியேறினர். தம்முடைய முன்னோர் முன்னொருகாலத்தில் தென்னிந்தியாவில் மங்களூரினின்றும் குடிபெயர்ந்து மடகாஸ்கருக்கு வந்து தங்கிவிட்டார்கள் என்று அந் நாட்டு மக்கள் கூறிக்கொள்கிறார்கள். அந் நாட்டின் பழம் பெயர் ‘மலே’ என்பது. சமஸ்கிருத சொற்கள் கலந்த இந்தோனேசிய மொழியை மடகாஸ்கர் மக்கள் வழங்கி வருகின்றார்கள். தென்னிந்தியாவிலிருந்து மலேசிய நாடுகளுக்குச் சென்ற வணிகர்களோ, அன்றி அவர்கள் வழிவந்தவர்களோ மலேசியாவைக் கைவிட்டுச் சென்று மடகாஸ்கரில் குடியேறினர் போலும். பண்டைய காலந்தொட்டே மேலை நாடுகளுடன் தமிழ் மக்கள் மிகவும் விரிவான கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். அயல்நாட்டு வாணிகம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்துதான் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. தமிழகத்து ஏற்றுமதிச் சரக்குகளை அராபியரும், பினீஷியரும் எகிப்தியரும் தத்தம் மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிகத்தில் இறங்கியது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்றான். இவ் வாணிகத்தின் மூலம் தமிழ்ச் சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம்பெற்றுள்ளன. சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞரின் நூல்களில் இவற்றைக் காணலாம். ‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் நுழைந்து ‘அரிஸா’ என்று உருக்குலைந்தது. அம் மொழியில் கருவா (இலவங்கம்) என்னும் தமிழ்ச் சொல் ‘கார்ப்பியன்’ என்றும், இஞ்சி வேர் ‘சின்ஞிபேராஸ்’ என்றும், பிப்பாலி ‘பெர்ப்பெரி’ யாகவும் உருமாற்றம் அடைந்தன. இரு வேறு மொழிகளுக்கிடையே தோன்றும் சொற்கலப்புகளைக் கொண்டே அம்மொழி பேசும் நாடுகளுக்கிடையே நிலையான வாணிகத் தொடர்பு இருந்து வந்தது என்று உறுதியாகக் கூறமுடியாது. எனினும் அந் நாடுகள் ஒன்றோடொன்று கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வரலாம். தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும், ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்துகொண்டனர். எனினும், |