உருவாகி வளர்ந்துவந்த சென்னை சுகுணவிலாச சபையானது இவருடைய நாடகங்களையும், வேறு பல நாடகங்களையும், அரங்கேற்றிப் புகழ் பெற்றது. நாடகம் நடித்தல் இழிவு என்னும் ஓர் எண்ணத்தை மக்கள் உள்ளத்திலிருந்து முற்றிலும் அகற்றிய பெருமை இவரைச் சாரும். இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற பிறகு தமிழ்நாட்டில் திரைப்படங்கள் நூற்றுக்கணக்கில் வெளியாகி வருகின்றன. அதனால் நாடகங்கள் வழக்கிலிருந்து ஒழிந்துவிடுமோ என்று மக்கள் உள்ளத்தில் ஓர் அச்சம் பிறந்ததுண்டு. ஆனால், பல நாடக மன்றங்கள் தோன்றி நாடகக் கலையை வளர்த்து வருகின்றன. இவை நடிக்கும் நாடகங்களில் பெண்களே பெண் வேடந் தாங்கி நடிப்பதால் பாத்திரங்களின் நடிப்பு இயற்கையாக அமைந்துவருகின்றது. பல பொழுதுபோக்கு நாடகக் குழுக்கள் தற்போதைய அரசியல், சமூக, பண்பாட்டுப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களை நடித்து மக்கட்கு மகிழ்ச்சியூட்டி வருகின்றன. நாடகத் துறையில் டி. கே. சண்முகம் மிகவும் புகழ் பெற்றவர். நாட்டியம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டதொரு கால அளவில் கோயில்களில் தேவரடியார்கள், வழிபாட்டுத் தொண்டுகளில் ஈடுபாடு கொண்டு பாடியும் ஆடியும் மக்களை மகிழ்வித்து வந்தார்கள். எனினும் நாளடைவில் அவர்களுடைய வாழ்க்கை பல துன்பங்களுக்குட்படலாயிற்று. அவர்கள் கற்பில் வழுவிய வாழ்க்கை நடத்திப் பிழைக்கவேண்டி வந்ததால் அவர்களால் சமூகத்துக்கும் ஊறுபாடுகள் நேரிட்டன. பெண்மைக்கே இழுக்குத் தேடிக் கொடுத்துவந்த தேவரடியார்கள் கோயில் பணியில் ‘பொட்டுக் கட்டப்படும்’ முறையை அரசாங்கம் தடை செய்தது (1930). தேவரடியார்கள் வளர்த்துவந்த இசைக் கலையும், கூத்துக் கலையும் அவர்களுடனே மறைந்துவிடுமோ என்ற அச்சமும் ஏக்கமும் கலையுலகில் மக்கள் நெஞ்சில் குடிகொண்டன. ஆனால், அக் கலைகள் உயர்ந்த முறையில், தூயவடிவில், மறுவடிவு பெற்றுத் தொடர்ந்து நாட்டில் செல்வாக்குப் பெற்று வரலாயின. அவற்றை இழுக்கென எண்ணிய மக்கள் மீண்டும் அவற்றை வளர்த்து வருவதில் முனையலானார்கள். திருவான்மியூரில் செயல்பட்டுவரும் ‘கலாக்ஷேத்திரம்’ முதலான பல நிறுவனங்கள் குடும்பத்துச் சிறுவருக்கும் சிறுமியருக்கும் நாட்டியப் பயிற்சி அளித்து வருகின்றன. தமிழ்நாட்டுக்கே உரித்தான பரதநாட்டியம் |