காலம் வேறு; தொகுக்கப்பட்ட காலம் வேறு; எனவே, இந்நூல் எழுந்த காலத்தைக் கணித்தறிதல் முற்றுப் பெறாததொரு முயற்சியாகவே இருந்துவருகின்றது. கலித்தொகை சங்க இலக்கியம் யாவற்றுக்கும் காலத்தால் பிற்பட்டதெனக் கருதப்படுகின்றது; அல்லாமல் சங்ககாலத்தின் இறுதியில் இயற்றப்பட்டதெனக் கொள்ளுவதுமுண்டு. அகப்பொருளைப்பற்றிய சங்க இலக்கியங்கள் அனைத்தும் களவியலுக்கு உடம்பாடான ஒத்த காமத்தை அடிப்படையாகக் கொண்டவை. கைக்கிளை, பெருந்திணை என்னும் ஒவ்வாக் காமத்தைப் பற்றிய பாடல்களை அவற்றுள் காணமுடியாது. ஆனால், குறிஞ்சிக் கலியில் பெரும்பாலான பாடல்கள் கைக்கிளையையும் பெருந்திணையையும் பற்றியனவாகவே காணப்படுகின்றன. ‘மையின் மதியின் விளங்கு முகத்தாரை வவ்விக்கொளலும் அறன் எனக் கண்டன்று’ என்று குறிஞ்சிக் கலிப்பாடல் (கலித்.62) ஒன்று கூறுகின்றது. மகளிரைக் கவர்ந்து சென்று மணத்தலை வடமொழியாளர் இராக்கத மணம் என்பர். தொல்காப்பியர் பெருந்திணையாவது ஒவ்வாத காமம் என்று கூறினாரே யன்றி மகளிரை வௌவிச் செல்லும் இராக்கத மணமுறைக்கு விதி ஏதும் வகுத்திலர், ‘இராக்கத மணம் அறன்’ என்று தொல்காப்பியரோ, சங்ககாலப் புலவர்களோ எங்கும் எடுத்துக் கூறினாரிலர். ஆரியர்பால் வழங்கிய எண்வகை மணங்களுள் இராக்கத மணமும் ஒன்று. தமிழரிடம் இவ்வகை மணமுறை வழங்கியதில்லை. தம் காலத்து வழங்காத ஒரு பழக்கத்தைப் பாராட்டிப் பழந்தமிழ்ப் புலவர்கள் செய்யுள் இயற்றியலர். எனவே, ‘இராக்கத மணம் அறன்’ என்னும் இச்செய்யுளும் இதைப் போன்ற ஏனைய கலிப்பாக்களும் கடைச்சங்க காலத்துக்கு பிற்பட்டவை எனக் கொளல் வேண்டும். மற்றும் ‘தெருவின்கண் காரணமின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாரணவாசிப் பதம் பெயர்த்தல் ஏதில’ என்னும் கூற்று ஒன்று குறிஞ்சிக் கலியில் (கலித். 60) காணப்படுகின்றது. வாரணவாசி என்னும் சொல் சங்க நூல்கள் ஒன்றிலேனும் வழங்கப்படாத தொன்றாகும். அடுத்து, பிறிதொரு கலியில் ஆரியக் கடவுளரான ‘காமனாரும்’, அவர் தம்பி ‘சாமனாரும்’ வருகின்றனர். இப் பெயர்களையும் சங்க நூல்களில் காணமுடியாது. காமனைப்பற்றிய செய்திகள் பிற்காலத்திய சமண, பௌத்த காவியங்களிலும், ஆண்டாள் பாசுரங்களிலும், பெருங்கதையிலும் காணப்படு கின்றன. கலித்தொகை முழுவதிலும் மூவேந்தருள் பாண்டிய மன்னன் ஒருவனைப்பற்றியே பாடல்களே உள்ளன; ஏனைய |