உற்ற துணையாய் நின்று உதவிய புலனழுக்கற்ற புலவர் பெருமை போற்றுதற்குரியதன்றோ? பாரியின் பொன்றாப் பெருமை பார் எங்கும் பரவுதற்குரியதாகும். வில்லுக்கு விசயன் என்றும், விறலுக்கு வீமன் என்றும் உலகம் விதந்துரைத்தல் போல, பசித்தோர்க்குப் பாரி என்று பாரெல்லாம் போற்றுதற் குரிய பெருமை அவ் வள்ளலிடம் அமைந்திருந்தது. “மிடுக்கி லாதனை வீம னேவிறல் விசய னேவில்லுக் கிவனென்று கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று கூறினும் கொடுப் பாரிலை பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் அடுக்கு மேல்அமரர் உலக மாள்வதற்கு யாதும் ஐயுற வில்லையே” என்னும் தேவாரத் திருவாக்காலும் பாரியின் பெருமை இனிது விளங்கும். இப்பொழுதும் பெருந்தன்மை வாய்ந்த குலத்திற் பிறந்த மக்களைப் “பாரிமான் மக்கள்” என்று தென்னாட்டில் வழங்கும் வாய்மொழி பாரியின் பெருமைக்கு என்றும் அழியாத சான்று பகர்வதாகும். |