24. அழகும் முத்தும் தமிழ் நாட்டிலே புலவர் பாடும் புகழுடையார் என்றும் உள்ளார். அன்னவருள் ஒருவர் ஐம்பதாண்டுக்கு முன்னே நெல்லையம் பதியில் வாழ்ந்தார். அவர், முத்தமிழ்ச் சுவை தேர்ந்த வித்தகர்; முத்துச்சாமி என்னும் பெயரினர். அந் நாளில் ஆசு கவியாய் விளங்கிய அழகிய சொக்கநாதர் அவ் வள்ளலின் ஆதரவைப் பெற்றார். ஆற்றிலே நீராடச் செல்லும் போதும், மேடையிலே நின்று மெல்லிய தென்றலைத் துய்க்கும் போதும், கோடையிலே குளிர் பூஞ்சோலையிற் சென்று உலாவும் போதும் அழகிய சொக்கர் அவ்வள்ளலின் குறிப்பறிந்து கவி பாடுவார்; அவர் இன்புறக் கண்டு தாமும் இன்புறுவார். ஒரு நாள், அச் செல்வர், அழகிய சொக்கருடன் உலாவி வரும்பொழுது, கரும்புத் தோட்டத்தின் அருகே கான மயில் ஒன்று ஆடக் கண்டு களிப்புற்று நின்றார். இளங் காற்றிலே ஆடிய கரும்பின் தோகையும், இன்பப் பெருக்கிலே ஆடிய மயிலின் தோகையும் அவர் கண்ணைக் கவர்ந்தன. அந் நிலையில் அழகிய சொக்கரை நோக்கிக் கரும்புக்கும் கான மயிலுக்கும் பொருந்தும் கவியொன்று பாடும்படி அவர் வேண்டினார். கவிஞரும் அக் காட்சியைக் கண்டு களிப்புற்று உடனே பாடலுற்றார்: “மேனியெல்லாம் கண்ணுறலால் வேள்விரும்பும் தன்மையினால் ஆனபசுந் தோகையினால் ஆடலினால் - மீனவன்நேர் |