மானபரா! நெல்லைநகர் வாழுமுத்துச் சாமிமன்னா! கானமயில் ஒப்பாம் கரும்பு” என்ற சொக்கர் பாட்டின் சுவை யறிந்து இன்புற்றார் வள்ளல். “மயிலுக்கு மேனியெல்லாம் கண்; கரும்புக்கும் மேனியிலே கண்(கணு). மயிலைச் செவ்வேள் விரும்பி வாகனமாகக் கொண்டான்; கரும்பை மாரவேள் விரும்பி வில்லாகக் கொண்டான். இன்பவுணர்ச்சியுற்ற போது மயில், தோகையை விரித்து ஆடும்; இளங்காற்று வீசும்போது கரும்பின் தோகையும் அசைந்து ஆடும். எனவே, கானமயில் ஒப்பாகும் கரும்பு” என்ற கருத்தமைந்த கவியைக் கேட்டு வள்ளல் மனமகிழ்ந்தார். கரும்புத் தோட்டத்தைக் கடந்து சாலையின் வழியே நடந்தனர் இருவரும். வளமான வாழைத் தோட்டம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. மேல் நோக்கி விரிந்த இலைகளையும், தரை நோக்கித் தாழ்ந்த பசுங்குலைகளையும் கண்ட வள்ளல், அருகே நின்ற கவிஞரை நோக்கினார்; ‘காய்’ என்று தொடங்கி ‘இலை’ என்று முடியும்படி ஒரு கவி சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உடனே வந்தது செந்தமிழ்ப் பாட்டு: “காய்சினம்இல் லாதான் கருணைமுத்துச் சாமிவள்ளல் வாய்மையுளான் பாடி வருவோர்க்குத் - தாய்நிகர்வான் எல்லையில்லா மாண்பொருளை ஈவான் இவனிடத்தில் இல்லையென்ற சொல்லே இலை” என்று சொக்கர் சொல்லிய வெண்பா வள்ளலின் உள்ளத்தைத் தொட்டது. இலையையும் குலையையும் |