நோக்கி நின்ற வள்ளலைத் தலைகவிழச் செய்தது அப்பாட்டு. காய் என்றெடுத்து இலையென்று முடித்த கவியிலே அப்படி என்ன பொடியைப் போட்டு விட்டார் சொக்கர்? அவ் வள்ளலிடம் அமைந்திருந்த குணங்களையே பொருளாக வைத்து. அவர் எடுத்துக் கொடுத்த இரு சொல்லையும் ஆதியும் அந்தமுமாக அமைத்து ஆனந்தமாகப் பாடி விட்டார் முத்தமிழை ஆதரித்த முத்துச்சாமி வள்ளலை வாயாரப் புகழ்ந்து பாட எப்போது வாய்ப்பு வரும் என்று எதிர் பார்த்திருந்த கவிஞர் இப்போது தம் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அப்பாட்டின் நயத்தைச் சிறிது பார்ப்போம்: வள்ளல், காய் சினம் அற்றவன்; கருணையுற்றவன்; வாய்மை உடையவன்; தாய்மை வாய்ந்தவன். கையால் அவன் அளிக்கும் கொடைக்கு எல்லையில்லை. அவன் நாவில் இல்லை யென்ற சொல்லே இல்லை என்பது பாட்டின் கருத்து. சேர்ந்தாரைக் கொல்லும் தன்மையுடைய தென்று திருவள்ளுவர் முதலிய சான்றோர் சொல்லிய முறையில் ‘காய் சினம்’ என்று கவிஞர் எடுத்த எடுப்பும், ஊழி பெயரினும் பெயரா உரையுடையார் என்று கம்பர் முதலிய கவிஞர் பாராட்டிய காராள குலத்திற் பிறந்த வள்ளலை, ‘வாய்மையுளான்’ என்று குறித்த வண்ணமும், பெற்ற பிள்ளைக்குப் பால் நினைந்தூட்டும் தாய் போல் பாடி வந்த பாவலர்க்குப் பரிசளித்த தலைவனைத் ‘தாய் நிகர்வான்’ என்று போற்றிய தன்மையும், எவர்க்கும் இல்லையென்னாது. எல்லையின்றித் கொடுத்த நல்லானிடம் ‘இல்லை என்ற சொல்லே இலை’ என ஏத்திய அழகும் இப் பாட்டிலே |