VI. மொழியும் நெறியும் 26. தமிழும் சைவமும்* பாரத நாடு, என்றும் தெய்வ மணம் கமழும் திருநாடு. தெய்வம் உண்டு என்ற கொள்கை நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாக இந்நாட்டில் நிலவி வந்துள்ளது. ‘இவ் வுலகத்தைப் படைப்பது தெய்வம்; காப்பது தெய்வம், அழிப்பது தெய்வம்’ என்னும் கருத்து பாரத நாட்டு பெருஞ் சமயங்களில் எல்லாம் காணப்படும். சுருங்கச் சொல்லின், ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்னும் உண்மையை அறிந்து போற்றும் நாடு இந் நாடு. இத் தகைய தெய்வத்தைத் தமிழ் நாட்டார் பலவாறு போற்றினார்கள்; பல திருநாமங்களால் அழைத்தார்கள். நாளடைவில் அப் பெயர்கள் நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காவும் பெருகிவிட்டன. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இதனைக் குறிக்கின்றார்.
* சென்னை வானொலி நிலையத்திற் பேசியது. அந்நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்த்தது. |