பக்கம் எண் :

மொழியும் நெறியும்181

யாகம்,     கோமேத    யாகம்    முதலிய    வேள்விகள்    செய்து,
குதிரைகளையும்   பசுக்களையும்   அரசர்கள்   பலி   கொடுத்தார்கள்.
பிம்பசாரன்  என்ற  அரசன்  பல  பசுக்களைக்  குறியிட்டுக்  கோமேத
யாகம்  செய்யக்  கருதியதைக்   கேள்வியுற்று,   புத்தர்,  அவன் அரசு
புரிந்த  நகரத்திற்கு விரைந்து சென்றார்.  கொல்லாமையாகிய  அறத்தின்
பெருமையை  அவன்  உள்ளங்   கொள்ள   எடுத்துரைத்தார்.   புத்தர்
உருக்கமாகப்  பேசிய  வாய்மொழியைக்   கேட்ட   பிம்பசாரன்  மனம்
மாறினான்;   யாகத்தை  நிறுத்தினான்;  அன்று   முதல்   கொல்லாமை
என்னும்  நல்லறத்தை  மேற்கொண்டு  வாழ்ந்தான்.   இவ்வாறு  புத்தர்
சரிதம் கூறுகின்றது.

இங்ஙனம்   வடநாட்டில்    புத்தர்    செய்த    நற்போதனையைத்
தென்னாட்டில்   திருவள்ளுவர் செய்தார்.

“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை”.

என்று     திருக்குறள்     திருத்தமாகக்  கூறுகின்றது.  தமிழ் நாட்டில்
நடந்த  கோமேதயாகம்  ஒன்று   மணிமேகலையிற்  குறிக்கப்படுகின்றது.
அழகான    ஒரு    பசு;    அதன்   கொம்புகளில்   மாலை   சுற்றி
அலங்கரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் நிகழ  நின்ற  தீமையையறிந்து அப்
பசு  அங்கமெல்லாம்  பதறிற்று;  வாய்   விட்டுக்  கதறிற்று;   கண்ணீர்
வடித்தது,   அதனைக்   கண்டான்    ஆபுத்திரன்    என்ற  சிறுவன்;
எவ்வாற்றானும்   அந் நல்லுயிரைக் காப்பாற்றக்  கருதினான்.  அன்றிரவு
காரிருளில்    எல்லோரும்   கண்ணுறங்கும்   வேளை  பார்த்து,  அப்
பசுவைக் கட்டவிழ்த்துக் காட்டுக்குள்ளே ஓட்டிச் சென்றான். யாகப்