பக்கம் எண் :

194தமிழ் இன்பம்

தருக்கிய     விழியும்    உடைய  அவ்  வீரன்   இப்பொழுது  காவல்
தெய்வமாய்.    பதினெட்டாம்படிக்    கறுப்பன்    என்ற   பெயரோடு
சோலைமலையிலே  காட்சி  யளிக்கின்றான்.   அவனை   நினைத்தாலே
குற்றமுள்ள    நெஞ்சு    குறுகுறுக்கும்;     படிறுடையார்    உள்ளம்
பறையடிக்கும்.  நீதி  மன்றத்தில்   தீராத   வழக்குகளும்  கறுப்பையன்
படிக்கட்டில் தீர்ந்துவிடும். 

முருகனுக்  குகந்த படைவீட்டிலே - கறுப்பையன் காக்கும் கோட்டை
மலையிலே  -  ஒரு  கள்ளனும்   நெடுங்காலமாக  உள்ளான்!  அன்று
இன்று  எனாதபடி,   என்றும்   அவன்  உள்ளான்  என்று ஆன்றோர்
கூறுவர்.   கள்ளனும்   அவனே;   காப்பானும்   அவனே!   ஆதியும்
அந்தமும்   அவனே!   ஆதியும்   அவனே;    சோதியும்   அவனே!
சோலைமலை  அரசனும்  அவனே!  அம்  மாயக்  கள்வனைக்  கண்டு
கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.

“வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்துஎன்
நெஞ்சம் உயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே”

என்று     பாடினார்;   பரவினார்;  பரவசமாயினார்;  உள்ளம் கவர்ந்த
கள்வனை   நினைந்து   உருகினார்;   அவன்   அழகைக்   கண்ணாற்
பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.

இங்ஙனம்  ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த
வஞ்சக்  கள்வனே  சோலை   மலையில்   நின்று  அருளும் திருமால்.
அவர் பெருமையால் சோலைமலை, ‘திருமால்  இருஞ்சோலை’  என்னும்
பெயர் பெற்றது.