என்று கவியரசர் கூறுமாறு பகையரசனுக்கு விடை கொடுத்தனுப்பினான். அவ்வாறே, வில்லாண்மையில் தலைசிறந்து விளங்கிய விசயன், போர்களத்தில் படைக்கலம் இழந்து எளியனாய் நின்ற கர்ணனது நிலைகண்டு தளர்ந்து, அவன்மீது அம்பெய்தலைத் தவிர்த்த ஆண்மை இராமனது உயரிய அருளை நிகர்ப்பதாகும். “அன்று போர்புரி சேனை யின்பதி யான வீரனைநீ இன்று போய்இனி நாளை வாஎன இனிதி யம்பினனால் வென்றி கூர்வரி வின்மை யால்அடல் வெவ்வ ரக்கரைமுன் கொன்ற காளையை ஒத்த பேரிசை கொண்ட ஆண்மையினான்” என்று வில்லி, விசயனது பெருமையைப் போற்றிப் புகழ்ந்தார். இங்ஙனம் இம் மாநிலத்தில் அறநெறி மறநெறியோடு மாறுபடும்பொழுது இறுதியில் அறமே வெல்லும் என்பது ஒருதலை. “பொறுத்தார் பூமி யாள்வார்” என்னும் பொய்யாமொழிக்குக் கோசல நாட்டு வீரனும் குருகுலக் குரிசிலும் இணையற்ற சான்றாவர்.. “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” - திருவள்ளுவர் |