காளத்தி வேடன் தனக்கினிய இறைச்சியே தன் தலைவனாகிய இறைவனுக்கு இனியதாகும் என்று எண்ணி, அதனை எடுத்து ஊட்டியவாறே, குகன் தனக்கினிய கங்கையாற்று மீனையும் கொம்புத் தேனையும் எடுத்துக்கொண்டு சென்றான். அவ் விரண்டையும் இராமன் திருமுன்பு வைத்து, “ஐயனே! தேனும் மீனும் திருத்திக் கொணர்ந்தேன். தேவரீர் திருவமுது செய்தருளல் வேண்டும்” என்று இறைஞ்சி நின்றான். அச் செயல் நிகழும்போது இராமனுடன் விருத்த மாதர் சிலர் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் குகனது மனப்பான்மையை அறியாதவராய், தகாத பொருள்களை வேடன் எடுத்துவந்து அபசாரம் செய்துவிட்டான் என்றெண்ணி வெறித்து நோக்கினர். அவர்கள் மனத்தில் நிகழ்ந்த கருத்தினை அறிந்த இராமன், “அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால் அமுதினும் சீர்த்த வன்றே” என்று விருத்த மாதரைத் தெருட்டி யருளினான். இதற்கு நேரான செயல் கண்ணப்பன் சரித்திரத்தில் உண்டு. கண்ணப்பனுக்கு இனிய காளத்தி நாதனைச் சிவ கோசரியார் என்னும் வேதியர் முறைப்படி பூசனை செய்து வந்தார்; கண்ணப்பன் இறைச்சியைக் கொண்டு திருக் கோயிலில் இட்டதைக் கண்டு செய்வ தொன்றறியாது கவலை கொண்டிருந்தார். அதை உணர்ந்த இறைவன் அவர் கனவிலே தோன்றி, |