அளவிறந்த வலிமையை அறிந்த வானரத் தலைவன் அவனை வெல்ல இயாலாது, அவன் தலை மீதிருந்த மணிமுடியைக் கவர்ந்து, மீண்டும் இராமனது பாசறையை வந்தடைந்தான். காலனுக்கும் காலனா யமைந்த அரக்கன் கையினின்றும் தப்பி வந்த வானர வீரனைக் கண்டு இராமன் களிகூர்ந்தான். அந் நிலையில் அன்பினால் அகங்குழைந்த வானர மன்னன், ஐயனை நோக்கி, “காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்ட மாட்டேன் நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன் கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும்அக் கிளியன் னாளை மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறுங்கை வந்தேன்” என்றும் மனம் வருந்தி மொழிந்தான். “அந்தோ! காட்டில் வாழும் கழுகின் வேந்தனும், நாட்டில் வாழும் நல்வேடனும் காட்டிய அன்பை நான் காட்ட இயலாதவனாயினேன். இலங்கை மாநகரில் சிறை யிருந்த சோகத்தாளாய நங்கையை இங்கே கொண்டுவர வலியற்று வெறுமையாகக் கண்டு வந்தேனே; நல்லார்க்கு இடர் விளைக்கும் அரக்கனை எதிர்த்தும், அவன் சிரங்களைக் கொய்து கொணராது வெறுங்கையனாய் வந்தேனே” என்று வானர மன்னன் வருந்தினான். காட்டிலே கழுகின் வேந்தன் ஆற்றிய கடமையையும் நாட்டிலே கங்கை வேடன் ஆற்றிய நன்மையையும் அறிவோமாயின், வானர வீரனது சொல்லின் பொருள் |