பக்கம் எண் :

228தமிழ் இன்பம்

“அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானதெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே அந்நெறியில்
                                புலன்சிறப்பத்

துங்கமறும் உடற்சமணர் சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத்

தங்களின்மே லாம்தரும சேனர்எனும் பெயர்கொடுத்தார்”

என்று     அவர்  வரலாறு  கூறுகின்றது.  இவ்வாறு  சமண சமயத்தில்
சிறப்புற்றிருந்த  அறிஞர்  அவருடைய  தமக்கையார் அருளால் மீண்டும்
சிவநெறியை மேற்  கொண்டு  செந்தமிழ்ப் பாட்டிசைத்துச் செம்மையான
தொண்டு புரிந்த செய்தியைத் திருத்தொண்டர் புராணத்திற் காணலாம்.

இத்  தகைய சீர்மை வாய்ந்த பாடலி நகரங்கள் இக் காலத்தில் வேறு
பெயர்  பெற்றுள்ளன.  வட  நாட்டுப்  பாடலிபுத்திரம் பாட்னா (patna)
என்றும்,  தென்னாட்டுப்  பாடலிபுத்திரம்  திருப்பாதிரிப்புலியூர் என்றும்
இப்போது  வழங்குகின்றன.   பாடலி   என்ற  வடசொல்லுக்கும், பாதிரி
என்ற  தென்   சொல்லுக்கும்  பொருள் ஒன்றே. திருப்பாதிரிப்புலியூரில்
கோயில்  கொண்டுள்ள  ஈசன் பாடலீசுரர் என்றே  இன்றும் அழைக்கப
பெறுகின்றார்.

பாரத      நாட்டுப்   புண்ணியத்   தலங்களுள்   காசி   என்னும்
வாரணாசியும்,    இராமேச்சுரமும்    தலைசிறந்தன  என்பது  தக்கோர்
கொள்கை.   இந்திய  நாட்டுத்  தென்கோடியில் உள்ள இராமேச்சுரத்தை
நாடி   வருவர்   வடநாட்டார்.   காசியிலுள்ள  விசுவநாதரை  வழிபடச்
செல்வர்   தென்னாட்டார்.  வடகாசியின்  வாசியறிந்த தமிழ் மக்கள் தம்
நாட்டிலும் ஒரு காசியை உண்டாக்கி