எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் எங்கள்குறக் குடிக்கடுத்த இயல்பிதுகாண் அம்மே” ‘ஏ! வஞ்சி! மலையின் வளத்திலும் மலர்களின் சிறப்பிலும் என் மலை உன் மலைக்கு இளைத்த தென்றெண்ணாதே; எனது மலையில் கொழுங் கொடியில் செழுங் கிழங்கு வீழும். அக் கிழங்கை அகழ்ந்தெடுத்து அக மகிழ்வோம். குன்றில் நிறைந்த குறிஞ்சி மலர்களைக் கொய்து குழைந்த முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம். பழம் பிழிந்து சாறெடுத்து அதனைத் தேனோடு கலந்து தினமும் உண்போம். செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தினருக்குக் கொடுப்போம். பதமிட்ட புலித்தேலைப் பாயாக விரிப்போம். காலையில் எழுந்து கருணை வடிவாய அங்கயற்கண்ணியைத் தொழுவோம். இத் தகைய மலையினும் செம்மை வாய்ந்த மலை எங்குமே யில்லை’ என்று செம்மாந்து உரைத்தாள். அருவியிலும் மற்றைய அரும்பொருளிலும் இருமலையும் நிகரெனவே குற்றாலமாதின் மனத்தில் தோன்றியது. ஆகவே, வேறு வகையால் பொதிய மலை மாதை வெல்லக் கருதினாள். புதுப் பெருமையில்லாதவர் பழம் பெருமை கூறும் பான்மை போல் குற்றாலக் குறவஞ்சி தனது நாட்டின் தொன்மை கூறத் தொடங்கினாள்: “தக்க பூமிக்கு முன்புள்ள நாடு சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு திக்கெல் லாம்வளர்ந் தோங்கிய நாடு |