இன்னும், பாலும் நெய்யும் தந்து மாந்தர் உடலைப் பாதுகாப்பதும் மாடல்லவா? பாலில் உயர்ந்தது பசுவின்பால். அமைதியும், அன்பும், பொறுமையும் உடையது பசு. தன் கன்றுக்கு உரிய பாலைக் கவர்ந்துகொள்ளும் கல்நெஞ்சருக்கும் கரவாது பால் கொடுக்கும் கருணை வாய்ந்தது பசு. “அறந்தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் “பசுக்களை ஆதரித்தல் வேண்டும் என்பது தமிழர் கொள்கை. கழனியிற் பணி செய்யும் காளை மாடுகளும், காலையும் மாலையும் இனிய பாலளிக்கும் கறவை மாடுகளும் நோயின்றிச் செழித்து வளர்வதற்காக நிகழ்வது மாட்டுப் பொங்கல். அந்த நாளில் கன்று காலிகளுக்குக் கொண்டாடட்டம். அவற்றை ஆற்றிலும் குளத்திலும் நீராட்டுவர் ; கொம்பிலே பூவும் தழையும் சூட்டுவர் ; மணிகளைக் கழுத்திலே மாட்டுவர் ; நல்ல தீனியை ஊட்டுவர் ; பொங்கல் முடிந்தவுடன் அந்தி மாலையில் வீதியிலே விரட்டுவர். அவை குதித்துப் பாய்ந்து கும்மாளம் போடுவது கண்ணுக்கு இனிய காட்சியாகும். சென்ற சில ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பொங்கல் மங்கலாக நடைபெற்றது ; இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை. அரிசிப் பஞ்சமும், ஆடைப் பஞ்சமும், அகவிலைக் கொடுமையும் நாட்டை அரித்துக்கொண்டிருக்கும்பொழுது, பொங்கல் எப்படி இன்பப் பொங்கலாகும்? “இனி வரும் பொங்கல் பெரும் பொங்கலாக வேண்டும் ; தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் எல்லாம் விளை நிலமாக மாறவேண்டும் ; உண்ண உணவும் |