சோலையில் புகுந்து தமிழ் மணத்தையெல்லாம் தமிழ்த் தென்றல் வாரி வழங்கும் என்று தமிழகம் எதிர் பார்க்கின்றது. தென்றல் வீசும் காலத்தில், ‘பிரிந்தவர் பொருந்துவர், பிணக்கமுற்றவர் இணக்கமுறுவர்; ஊடி நின்றவர்கூடி மகிழ்வர்’ என்பது தமிழர் கொள்கை. “ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்ஆணை கூடுமின் என்று குயில் சாற்றும்” என்பதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. எனவே, தமிழ்த் தென்றல் தமிழர் இனத்திலே, பிரிந்தவரைப் பொருத்தும்; வேறுபட்டவரை ஒன்றுபடுத்தும்; தமிழ்க் குலத்தை அரிக்கின்ற வேற்றுமைகளை ஒழிக்கும்; தமிழருக்கு இன்ப நெறி காட்டும் என்று நம்புகின்றோம். |