பக்கம் எண் :

78தமிழ் இன்பம்

ஒருவனேயாயின்       அவனை    மணம்    புரிந்து     வாழ்வேன்;
இல்லாவிட்டால்  இறந்து  படுவேன்”  என்று  உறுதி கொண்டாள் சீதை.
கற்பு  நெறி  என்பது இதுதான்.  காதலனையன்றி  மற்றோர் ஆடவனை
மனத்திலும்  கருத  ஒருப்படாத  உறுதியே  கற்பு  எனப்படும். இதையே
திருவள்ளுவர் வியந்து பாடினார்.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்”

என்பது அவர் திருவாக்கு.

கற்புடைய     மாதரிடம்  மென்மையும்  உண்டு;  மனத்திண்மையும்
உண்டு.    பொறுக்கும்   திறமும்  உண்டு;  மாறுபட்டோரை  ஒறுக்கும்
திறமும்  உண்டு.   சிலப்பதிகாரத்தின்   கதாநாயகியாகிய கண்ணகியிடம்
இவ்விரு    தன்மைகளையும்    பார்க்கின்றோம்.   கொண்ட  கணவன்
அவளுக்குக்      கொடுமை      செய்தான்;    செல்வத்தையெல்லாம்
செலவழித்தான்.   அல்லும்   பகலும்  அயலார்  அறியாமல்   கண்ணீர்
வடித்தாள்   கண்ணகி;   மங்கல  அணியைத் தவிர மற்றைய நகைகளை
யெல்லாம்  மறந்தாள்;   தன்னை   அழகு  செய்து  கொள்ளவேண்டும்
என்ற எண்ணத்தை அறவே துறந்தாள்.

“அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப
பவள வாள்நுதல் திலகம் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி”