என்று ஒருவரும் வருந்தாதபடி வளம் பெருக்கிக் குடிகளைக் காப்பதன்றோ நல்லரசின் முதற் கடமை? தமிழ்நாட்டுக் கவிஞராகிய பாரதியார், வருங்காலப் பாரத அரசாங்கத்திற்கு- சுதந்தர அரசாங்கத்திற்கு - அடிப்படையான பொருளாதாரத் திட்டமொன்று வகுத்துப் போந்தார்: “இனிஒருவிதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்; தனிஒருவனுக் குணவில்லைஎனில் சகத்தினை அழித்திடுவோம்” என்பது அக் கவிஞரின் வாக்கு. இயற்கை வளம் நிறைந்த பாரத நாட்டில் பசிப்பிணியை ஒழித்தல் அரிதன்று. கங்கையும், கோதாவரியும், காவரியும் பாய்கின்ற வளநாட்டில் உணவுப் பஞ்சம் தலை காட்டலாகுமோ? இன்று வளர்ந்தோங்கி வருகின்ற விஞ்ஞானக் கலைகளின் உதவியால் விளைபொருள்களைப் பெருக்கி, பாழிடங்களையெல்லாம் பயிர் முகங்காட்டும் பழனங்களாக்கி, பாரத நாட்டை ஓர் அமுத சுரபியாக உருவாக்குதல் அ ரிதாகுமோ? உடலை வளர்ப்பது உணவு; உயிரை வளர்ப்பது அறிவு. “அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்பது திருவள்ளுவர் திருவாக்கு. அறிவுப் பசி இப்பொழுது தமிழ்நாட்டிலே அதிகரித்து வருகின்றது, அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை - அருங்கலை நிறைந்த தமிழ்மொழியைப் ‘போற்றாதே ஆற்ற நாள் போக்கினோமே’ என்ற உணர்ச்சி ஆங்கிலங்கற்ற |