பக்கம் எண் :

114ஒப்பியன் மொழிநூல்

ய், வ் என்னும் மெய்கள் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியில் ஈருயிர்களைப் புணர்த்தாலும், இடையில் உடம்படு (உடன்படுத்தும்) மெய்களாய்த் தோன்றத்தான் செய்யும். இது எல்லா மொழிக்கும் பொதுவான ஒலிநூல் விதி.

கா : he + is = ஹீயிஸ், my + object = மையாப்ஜெக்ற்ற் - ய், fuel = ப்வியூவெல், go + and (see) = கோவன்று - வ்.

Drawer, sower முதலிய ஆங்கிலச்சொற்களில், வகரவுடம்படு மெய்க்குப் பதிலாக யகரவுடம்படுமெய் வரு கிறதேயெனின், வகரத்தினும் யகரம் ஒலித்தற்கெளிதாதல் பற்றி, பிற்காலத்தில் யகரவுடம்படுமெய் பெருவழக்காயிற் றெனக் கொள்க. தமிழிலும் இங்ஙனமே. ஆயிடை, கோயில், சும்மாயிரு முதலிய வழக்குகளைக் காண்க.

மாணிக்க நாயகரைப் பின்பற்றுஞ் சிலர், அவரைப் போன்றே குறுகிய நோக்குடையராய், பல சொற்கட்குத் தவறான பொருளும், தமது கருத்திற்கிசையாத நூற்பாக்களை யும் சொல்வடிவங்களையும் இடைச்செருகலும் பாடவேறு பாடு மென்றும் கூறி வருகின்றனர். அவர் இனிமேலாயினும் விரி நோக்கடைவாராக.

மேனாட்டார் நடுநிலையும் ஒப்பியலறிவும் உடைய ராயினும், தமிழின் உண்மைத்தன்மையைக் காணமுடியா மைக்குப் பின்வருபவை காரணங்களாகும் :

(1) தமிழ் தற்போது இந்தியாவின் தென்கோடியில் ஒரு சிறு நிலப்பரப்பில் வழங்கல்.

(2) (தமிழுட்பட) இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வடசொற்கள் கலந்திருத்தல்.

(3) (கடல்கோளாலும், ஆரியத்தாலும், தமிழர் தவற்றாலும் பண்டைத் தமிழ்நூல்கள் அழிந்து போனபின்) இந்தியக் கலை நூல்களெல்லாம் இப்போது வடமொழியிலிருத்தல்.

(4) இதுபோது பல துறைகளிலும் பார்ப்பனர் உயர்வாயும் தமிழர் தாழ்வாயுமிருத்தல்.

(5) பார்ப்பனர் தமிழரின் மதத்தலைவராயிருத்தல்.

(6) தமிழைப்பற்றித் தமிழரே அறியாதிருத்தல்.