பக்கம் எண் :

118ஒப்பியன் மொழிநூல்

அதன்பின் தென் சமுத்திரத்தையடைந்து... நிச்சயம் பண் ணுங்கள். அந்தச் சமுத்திரத்தின் கண்ணே, மலைகளுட் சிறந்ததும், சித்திரமான பலவிதக் குன்றுகளையுடையதும், பொன்மய மானதும், நானாவித மரங்களுங் கொடிகளுஞ் செறிந்ததும், தேவர்களும் ரிஷிகளும் யக்ஷர்களும் அப்சரப் பெண்களும் தங்குவதும், சித்தர்களும் சாரணர்களும் கூட் டங் கூட்டமாக இருப்பதுமாகிய அழகிய மகேந்திர மலை,”1 என்று, சுக்கிரீவன் அங்கதனுக்குச் சொன்னதாக, வால்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்திற் கூறியிருப்பதினின்றும்,

“உன்னதத் தென் மயேந்திரமே”

என்று சிவதருமோத்திரமும்,

“பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு”

(சிலப். 11:19-20)

என்று இளங்கோவடிகளும் கூறுவதினின்றும், குமரிமலையின் பெருமையை உணரலாம்.

(4) குமரியாறு

மேற்கூறிய குமரிமலையினின்றும் பிறந்தோடிய ஆறு, அம் மலையின் பெயரால் குமரியென்றே அழைக்கப்பட்டது. இங்ஙனமன்றி, ஆற்றின் பெயரே மலைக்கு வழங்கினதாகவும் கொள்ளலாம்.

“குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை”

(மணிமே. 52)

“தென்றிசைக் குமரி யாடிய வருவோள்”

(மணிமே. 142)

“தெற்கட் குமரி யாடிய வருவேன்”

(மணிமே. 148)

என்று மணிமேகலையிலும்,

“தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”

(புறம்.6)

“குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி”

(புறம். 67)

என்று புறநானூற்றிலும்,

“கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி”

(சிலப். 7:3)

 

“மாமறை முதல்வன் மாடல னென்போன்......
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”

(சிலப். 15:13-5)

என்று சிலப்பதிகாரத்திலும் வந்திருத்தல் காண்க.


1. நடேச சாத்திரியார் மொழிபெயர்ப்பு