புறநானூற்றில், “குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அயிர் - நுண் மணல். அயிரை நீர்க்குள் அடிமட்டத்திலுள்ள மணலின், அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒருவகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தானிருக்கும். கடல் மீன்களில் அயிரைக் கொத்தது நெய்த்தோலி (நெத்திலி) என்று கூறப்படும். ஆகையால், மேற்கூறிய அடியில் குமரி யென்றது ஆறென்பது தெளிவு. இதைச் சிலப்பதிகாரத்தில் கன்னியை (குமரியை)க் காவிரியோடுறழக் கூறியதாலும், மேற்கூறிய அடிகளில் உள்ள குமரி என்பதை ஆற்றின் பெயராகவே உரையாசிரியர் கூறியிருப்பதாலும் அறியலாம். பழம்பாண்டி நாட்டில், முதலாவது,பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல்கொண்டமை, “அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” | (சிலப். 11 : 17-22) |
என்னும் சிலப்பதிகார வடிகளால் அறியலாம். இவ் வடிகட்கு, “முன்னொரு காலத்துத் தனது பெருமையினதளவை, அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி, வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல்பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளியாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டை யும் கொண்டதனால், வடதிசைக் கண்ணதாகிய கங்கையாற்றி னையும் இமயமலையினையும் கைக்கொண்டு, ஆண்டு மீண்டும் தென்திசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக வென்க” என்று உரை கூறியுள்ளார் அடியார்க்குநல்லார். இச் செய்தியையே, “மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
|