குமரியென்னு மாற்றிற்குமிடையே, எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும் பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென் றுணர்க. இஃது என்னைபெறுமாறெனின், 'வடிவேலெறிந்த.... கொடுங்கடல் கொள்ள' என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனா ருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும்”, என்பது.1 இதில், பஃறுளியாற்றிற்கும் குமரிக்கும் இடையிலுள்ள சேய்மை 700 காவதம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஒரு காவதம் பத்துமைல் என்றும் சொல்லப்படுகிறது. முற் காலத்தில் அது எத்துணைச் சேய்மையைக் குறித்ததோ தெரியவில்லை. இக்கால அளவுப்படிகொண்டாலும், தென் துருவத்திற்கும் குமரிமுனைக்கும் இடையிலுள்ள சேய்மை ஏறத்தாழ 7000 மைல் என்பதைத் திணைப்படத்தினின்றும் அறியலாம். தென்துருவ அண்மையில் விக்ற்றோரியா நாடு (Victoria Land) என்றொரு நிலப்பகுதியுமுள்ளது. அப் பகுதி யும் குமரிமுனையும் ஒருகால் இணைக்கப்பட்டு ஒரு நெடு நிலப்பரப்பாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், தென்துருவ வரையில், தமிழ்நாடு இருந்திருக்க முடியாது. ஆத்திரேலி யாவும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருகாலத்தில் இணைக்கப்பட்டிருந்தனவென்று மேனாட்டுக் கலைஞர் கூறியிருப்பதினின்றும், இம் முக்கண்டங்களுக்கும் நிலைத் திணை, பறவை, விலங்கு, மாந்தன்குலம், மொழி முதலிய வற்றிலுள்ள பல ஒப்புமைகளினின்றும், தெற்கே 3000 கல் தொலைவுவரை தமிழர் வதிந்திருக்கலாமென்று தோன்றுகிறது. குமரியாறு கடலில் அமிழ்ந்தது கடைக்கழகக் காலமாதலின், இடைக்கழக நூலாகிய தொல்காப்பியப் பாயிரத்திற் குமரியென்று குறிக்கப்பட்டது குமரியாறேயாகும். இது, “தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அது தானும் பனம்பாரனார்,
1. சிலப். 8 : 1.
|