பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்237

“கலஞ்செய் கம்மியர்” “கலம்புணர் கம்மியர்” என்று மணிமேகலையிலும்,

“நீரினின்று நிலத்தேற்றவு
நிலத்தினின்று நீர்பரப்பவு
மளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
யருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போர்”

(பட்டினப். 1130-7)

என்றும்,

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”

என்று பட்டினப்பாலையிலும்,

“இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”1 என்று சிலப்பதிகாரத்திலும் கூறியிருப்பதால், பண்டைத்தமிழரின் கலஞ்செய்வினையும்(Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும்.

வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன :

வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல்.

“வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள”

(உரி. 21)

என்பது தொல்காப்பியம்,

நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது.

நீள் - நீர். ஒ.நோ : கள் - கரு (நிறம்). தெள் - தெருள். வார் + இதி = வாரிதி (வ.). வார் + அணம் = வாரணம்.

வாரி, வாரிதி, வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன.


1. கலங்கரை விளக்கம் - Light House.