“கலஞ்செய் கம்மியர்” “கலம்புணர் கம்மியர்” என்று மணிமேகலையிலும், “நீரினின்று நிலத்தேற்றவு நிலத்தினின்று நீர்பரப்பவு மளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி யருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போர்” | (பட்டினப். 1130-7) |
என்றும், “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்” என்று பட்டினப்பாலையிலும், “இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”1 என்று சிலப்பதிகாரத்திலும் கூறியிருப்பதால், பண்டைத்தமிழரின் கலஞ்செய்வினையும்(Ship building) நீர்வாணிகமும் நன்றாய் விளங்கும். வாரித்துறைபற்றிய பல தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன. அவையாவன : வாரி = கடல். வார் + இ = வாரி. வார்தல் நீளுதல். “வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள” | (உரி. 21) |
என்பது தொல்காப்பியம், நீர் ஓரிடத்தினின்று நீள்வதால் நீர் என்றும் வாரி யென்றும் கூறப்பட்டது. நீள் - நீர். ஒ.நோ : கள் - கரு (நிறம்). தெள் - தெருள். வார் + இதி = வாரிதி (வ.). வார் + அணம் = வாரணம். வாரி, வாரிதி, வாரணம் என்னும் நீர்ப்பெயர்கள், சிறந்த நீர்நிலையும் பிற நீர்நிலைகட்குக் காரணமுமான கடலைக் குறித்தன.
1. கலங்கரை விளக்கம் - Light House.
|