ளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள் கொள்ளினுங்கூட, அணவு என்னும் சொல் அண் என்னும் வேரிற்பிறந்த தனித்தமிழ்ச் சொல்லாதலின், அந்தணன் என்பது இருபிறப்பி (Hybrid)யாகும். அந்தணன் என்னும் பெயர் அந்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவிலும் வழங்கும். “அந்த ணாளர்க் குரியவும் அரசர்க் கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே” | (தொல். மர. 68) |
“அந்த ணாளர்க் கரசுவரை வின்றே” | (தொல். மர. 80) |
என்று கூறியிருப்பதால், பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாட்டில் அரசுவினை யிருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அந்தணர் என்னும் பெயர், முதலாவது, தனித்தமிழ் முனிவரைக் குறித்ததென்று முன்னமே கூறப்பட்டது. அந்தணர் என்னுஞ் சொல்லின் (அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்னும்) பொருளுக்கேற்ப, “அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்” | (குறள். 30) |
என்று அந்தணர்க் கிலக்கணங் கூறினதுமன்றி, அதைத் துறவிகளைப்பற்றிக் கூறும் “நீத்தார் பெருமை” என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர். “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப” | (செய். 1711) |
என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே, “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” | (குறள். 28) |
என்று 'நீத்தார் பெருமை'யிற் குறித்தனர் திருவள்ளுவர். அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும். அதனால் தான், அருளுடைமை, புலான்மறுத்தல், கொல்லாமை
|