பக்கம் எண் :

மொழிநூல்89

கூறியுள்ளனர். வடை என்பது 'வள்' என்னும் வேரினின்று பிறந்ததென்பதையும், வட்டமானது என்னும் பொருளுடைய தென்பதையும், உழுந்து மாவிற்குள் எண்ணெய் எளிதாய்ச் செல்லும்படி துளையிடுவ தென்பதையும், துளையினால் சுவை யாவது மணமாவது கெடா தென்பதையும் அவர் அறிந்திலர்.

ஒத்துப்பார்க்க: பெள் + தை = பெட்டை - பெடை; வள்+தை = வட்டை - வடை. பெள் = விரும்பு, வள் = வளை.

2. மொழிநூல் என்றும் ஒப்பியல் தன்மையுள்ளது

'அட்டையாடல்' என்பதன் பொருள் உணர்தற்குத் தெலுங்கறிவும், கன்னட அறிவும் வேண்டியதா யிருக்கின்றது. அட்ட அல்லது அட்டெ = முண்டம் (தெ., க.)1

அம்பு (வளையல்), அம்பி (படகு, காளான்), ஆம்பி (காளான்) என்னும் சொற்களின் வேர்க்கருத்தை லத்தீனினுள்ள ampi என்னுஞ் சொல்லும், கிரேக்கிலுள்ள ambhi என்னுஞ் சொல்லும் உணர்த்துகின்றன.

amphi = round; amphitheatre என்னும் தொகைச் சொல்லை நோக்குக.

3. மொழிநூல் பிறகலைச் சார்புள்ளது

மொழிநூல், கணிதத்தைப்போலப் பிறகலை சாராத கலையன்று. மொழிநூலின் ஒவ்வொரு கூற்றும், அவ்வக் கலைக்குப் பொருந்தியதாயிருத்தல் வேண்டும்.

ஆங்கிலத்திலுள்ள teak என்னுஞ் சொல், தேக்கு என்னும் தமிழ்ச்சொல்லே யென்பதற்குத் திணைநூல் (Geography) சான்றாகும். இந்தியாவில், விந்திய மலைக்கு வடக்கே தேக்கு வளர்வதில்லை என்று, ராகொஸின் (Ragozin) தமது 'வேதகால இந்தியா' (Vedic India) என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார்.

எழுத்தொலிகளை ஒலிப்பதில் வயிறு, நுரையீரல், மூச்சுக் குழாய், தொண்டை, நா, அண்ணம், பல், உதடு, மூக்கு ஆகிய பலவுறுப்புகள் தொடர்புறுவதால், உடல் நூலும்(Physiology);

உள்ளக்கருத்துகளின் வெளிப்பாடே மொழியாதலின், உளநூலும் (Psychology);


1. வேங்கடராஜு லு ரெட்டியார் கட்டுரை (தமிழ்ப்பொழில்).