மொழிகளைப் பேசும் மக்களின் இடமாற்றத்தையும் நாகரிக வளர்ச்சியையும் அறிந்திருக்க வேண்டியதால், சரித்திரமும் (History); தட்பவெப்ப நிலைக்கும் அவ்வந் நாட்டுப் பொருள்கட்கும் தக்கபடி, ஒலியும் சொல்லும் மாறுபடுவதால், திணைநூலும் (Geography); நாகரிக மக்களின் மொழிகள், மதவியலைப் பெரிதுந் தழுவியிருப்பதால், மதநூல் (Theology), பழமை நூல் (Mythology), பட்டாங்கு நூல் (Philosophy) முதலிய கலை களும்; இன்னும், சுருங்கக் கூறின் பல கலைகளும் மொழி நூற் பயிற்சிக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். 4. மொழிகளெல்லாம் ஓரளவில் தொடர்புடையன: சில சொற்களும், அவற்றையாளும் நெறிமுறைகளும், பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றன. கா : தமிழ் - மன், E. - man, A.S. - mann, Skt. - மநு. தமிழ் - தா, L. - do, Skt. - da.; தமிழ் - நாவாய், L. - navis, Skt. - நௌ. தனிக்குறிலையடுத்த மெய் உயிர்வரின் இரட்டுவது பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றது. கா : தமிழ் - மண் + உலகம் = மண்ணுலகம், வெள் + ஆடு = வெள்ளாடு. ஆங்கிலம் - thin + er = thinner, sit + ing = sitting. 5. மொழிகளுக்குள் இன அளவிற்குத் தக்கபடி ஒப்புமை யிருக்கும். 6. மொழிகளை ஆராயும்போது, முன்னை மொழியை முன் வைத்தும் பின்னை மொழியைப் பின்வைத்தும் ஆராய வேண்டும். சிலர், தமிழுக்கு மிகப் பிற்பட்டனவும், தமிழினின்றே தோன்றினவும், மிகத் திரிந்துள்ளனவும், ஆரியக் கலப்பு மிக்குள்ளனவுமான மலையாளம், கன்னடம் முதலிய மொழி களுக்குப் பிற்காலத்தில் வடமொழியைப் பின்பற்றி எழுதி யுள்ள 'கேரளபாணினீயம்', 'கர்னாடக ஸப்தமணி தர்ப்பணம்'
|