பக்கம் எண் :

78செந்தமிழ்க் காஞ்சி

7ஆம

7ஆம் பாடம்

பூப்பறித்தல்

'என்னருமைக் குஞ்சுகளாம்' என்ற மெட்டு.

   1. தோட்டத்திலே பூப்பறிக்க
     கூட்டமாக வாரும்
  பாட்டுப் பாடிப் பலமலரைக்
     கூட்டிக் கூட்டிச் சேரும்.
   
   2. மல்லிகையும் மருக்கொழுந்தும்
     வாசமான ரோஜா
  நல்ல நல்ல மருகுடனே
     நலமாகப் பறிப்போம்.
   
   3. கிண்ணம்போல வண்ணமாகக்
  கிளையிலுள்ள பூவை
  கண்ணிகண்ணி யாகக்கட்டி
     கழுத்திலேநாம் அணிவோம்.
   
   4. ஊதுகிற குழல்போல
     உள்ள நல்ல பூவை
  ஊதியதன் உள்ளிருந்தே
     ஒழுகும் தேனைக் குடிப்போம்
   
   5. வானத்து நக்ஷத்திர
     வகைபோன்ற பூவை
  ஏனத்தில் பறித்திடுப்பில்
     இடுக்குவோமே வாரும்.
   
   6. அடுக்குமல்லி சாமந்தி
     அலரிஇவை எல்லாம்
  தொடுத்துடனே மாலையாகத்
     தொங்கவிட்டுப் பார்ப்போம்.
   
   7. கம்மல் போன்ற பூக்களைநாம்
     கனமாகப் பறித்து
  பொம்மை காதில் ஒட்டிஒட்டிப்
     போட்டழகு பார்ப்போம்.
   
   8. கூட்டிச் சேர்த்த பூவை எல்லாம்
     கூடையிலே கொட்டி
  வீட்டுக்குப்போய் அன்னையார்க்குக்
     காட்டுவோமே வாரும்.