பக்கம் எண் :

தமிழ்மொழித் தோற்றம் 103

(4) செய்யுள் வடிவிலுள்ள அகராதிகளான நிகண்டுகள் உரிச்சொல்லென்று பெயர்பெறல்.

“இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே”

(நன். 460)

என்றார் பவணந்தியார்.

உரிச்சொல் நிகண்டு என்று ஒரு நிகண்டுமுளது. செய்யுளிற் சிறப்பாக வரும் சொற்களெல்லாம், மாணாக்கர் இளமையிற் பாடஞ் செய்தற்பொருட்டுத் தொகுக்கப்பட்டன. அத் தொகையே நிகண்டென்பது.

இப்போதுள்ள அகராதிக்கு முந்தின நிலை நிகண்டும், அதற்கு முந்தின நிலை உரிச்சொல்லு மாகும்.

(5) உரிச்சொல் செய்யுட் சொல்லே யென்று பண்டைக் காலத்தில் கூறப்பட்டமை.

“பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியவாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர்” என்று சேனாவரையர் கூறுதல் காண்க.

பிறவுரை மறுப்பு

(1)

உரை :

இசை குறிப்பு பண்பு என்பவற்றிற் குரியவை உரிச்சொல் என்பது.

மறுப்பு :

இது நாற்சொற்கும் பொதுவிலக்கணம் என்பது.

(2)

உ :

பெயர்க்கும் வினைக்கும் உரியது உரிச் சொல் என்பது.

ம :

இஃது இடைச்சொற்கும் ஏற்குமென்பது.

(3)

உ :

பலபொருட் கொருசொல்லும் ஒரு பொருட்குப் பல சொல்லுமாக உரியது உரிச்சொல் என்பது.

ம :

இதுவும் நாற்சொற் பொதுவிலக்கணம் என்பது.