பக்கம் எண் :

தமிழ்மொழித் தோற்றம் 145

அன்று போனான் = அல்லாது போனான். இன்று போனான் = இல்லாது போனான்.

இதையறியாது,

“ அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம்
தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே”

(நன். 173)

என்றார் பவணந்தியார். செய்யாது என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும்.

பெயரெச்சம்

செய்யாது (எதிர்மறை வினையெச்சம்) + அ (பலவின் பாலீறு) = செய்யாத (படர்க்கைப் பலவின்பால் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று).

படர்க்கைப் பலவின்பால் வினைமுற்றே பெயரெச்ச மாகுமென்று முன்னர்க் காட்டப்பட்டதை நினைக்க.

செய்யாத என்பது செய்யா என ஈறுகெட்டும் வரும்.

தொழிற்பெயர்

செய்யாத (பெயரெச்சம்) + மை (தொழிற்பெயரீறு) = செய்யாதமை.

செய்யா (ஈறுகெட்டது) + மை = செய்யாமை.

செய்யாத + அது = செய்யாதது.

வினையாலணையும் பெயர்

செய்யாத + அவன் = செய்யாதவன் - செய்யாதான்.

குறிப்புவினை

முற்று

குறிப்பு வினைமுற்று மூவகையது :

(1) பாலீறில்லாத பெயர். கா : அது மரம்; அவன் யார்?
(2) பாலீறுள்ள பெயர். கா : கண்ணன், நல்லது, நல்ல.
(3) குறைவினை (Defective Verb). கா : உண்டு, இல்லை.

உண்டு இல்லை என்பனவும் பாலீறு பெற்றவையே; இப்போது பாற்பொருளிழந்து வழங்குகின்றன.