வினா (1) ஈற்றுவினா - ஓ ஓகாரம் உயரச்சுட்டென்று முன்னர்க் கூறப்பட்டது. வினாப்பொருளில் உயரச்சுட்டுகளே பயன்படுத்தப்பட்டன. ஒரு பொருளை எதுவென்று வினவும்போது, கீழே கிடக்கும் பல பொருள்களில் ஒன்றை மேலேயெடுத்துக் காட்டிக் கேட்டல் போன்றவுணர்ச்சி குறிப்பாய்த் தோன்றுதலை நுண்ணிதினோக்கியுணர்க. சொற்கள் தோன்றுமுன், எது வேண்டுமென்னும் கருத்தில், ஒரு பொருள் எடுத்து அல்லது குறித்துக் காட்டியே கேட்கப்பட்டது. ஓகாரம் அவனோ, வந்தானோ என்னுஞ் சொற்களிற் போல ஈற்றுவினாவாகவே யிருக்கும். (2) இருதலைவினா - ஏ சேய்மை யண்மையிடைமைச் சுட்டுகளினின்று முறையே அவன் இவன் உவன் முதலிய சுட்டுப்பெயர்களும், அண்மைச் சுட்டினின்றே முன்னிலைப் பெயரும் பிறந்தபோது, தன்னைக் குறிக்க ஓர் ஒலி வேண்டியதாயிற்று. அதற்கு உள்ளிருந்தெழுப்பப்படும் ஓர் ஒலியே பொருத்தமாகும். அவ் வொலி ஏகாரமே. உண்டபின் வயிற்றிலிருந்து எழும் ஒலி ஏப்பம் (eructation) என்றும், துன்பத்தில் விடும் (அடிவயிற்றினின்றெழும்) நெட்டுயிர்ப்பு ஏங்கு என்னும் சொல்லாலும் குறிக்கப்படுதல் காண்க. ஏ என்னும் ஒலி அடிவயிற்றினின்று மேனோக்கி யெழுப்பப்படுவதால், அது எழற்பொருளையும் உயரத்தையும் உணர்த்துவதாகும். ஏ - எ. கா : எ - எக்கு, எழு, எடு, எம்பு, எவ்வு. ஏ - ஏ, ஏகு, ஏத்து, ஏந்து, ஏண், ஏர், ஏறு. தென்னு, நெடு, நெம்பு, சேண், மே, மேடு என்பவை, மெய்யொடு கூடிய எகர ஏகார வடிவாய்ப் பிறந்தவை. எழால், எழில், எழிலி, எழினி என்பவை எழு என்பதினடியாய்ப் பிறந்தவை.
|