பல தொழிலும் பல கலையும் பல நூலும் தோன்றிய போது ஒவ்வொன்றிலும் பற்பல சொற்கள் தோன்றின. ஒவ்வொரு திணையிலும் பொருளும் தொழிலும் கருத்தும் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன. ஒவ்வொரு தொழிலிலும் கலையிலும் நூலிலும் கருத்துகள் வேறுபடுதலின் வெவ்வேறு சொற்கள் பிறந்தன. மருதநிலத்தரசன் ஏனை நாற்றிணைகளையும் அடிப்படுத்திய போது, ஐந்திணை வழக்கும் ஒரு மொழியாயின; பின்பு அடுத்த நாடுகளைக் கைப்பற்றியபோது, சொல்வளம் விரிந்தது. விலங்கு பறவை முதலிய ஒவ்வோர் உயிரினத்தினின்றும் சில சொற்களும் வழக்குகளும் கருத்துகளும் தோன்றின. அவற்றுள் நிலைத்திணையினின்றும் தோன்றியவை மிகப்பல. அவையாவன : முதல் “அறுகுபோல் வேரூன்றி அரசுபோலோங்கி அத்தி போல் துளிர்த்து ஆல்போற் படர்ந்து .....” என்று ஒருவரை வாழ்த்துவது வழக்கம். அரசாணிக்கால் நட்டல், அறுகிடல் என்பவை திருமண வழக்கு. கொடி = குலத்தொடர்ச்சி. கா : கொடிவழி, கொடி கோத்திரம். புல் = சிறுமை. கா. புன்மை, புல்லியர், புன்செய், புன்செயல், புன்னகை. பனை = பெருமை, ஓரளவு. மரம் - மரபு, அடியுங் கவையுங் கிளையும் உடைய மரம்போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின், குலவழி மரபெனப்பட்டது. மன்று என்னும் சொல்லும் மரம் என்பதினின்றே வந்திருக்கின்றது. கா = சோலை. காத்தல் பழச்சோலையைப் போற் காத்தல்.
|