பக்கம் எண் :

130தமிழ் வளம்

     யாது எவன் என்னும் இரண்டும் அறியாப்பொருள் வினா வென்றார் தொல்காப்பியர். சேனாவரையர், இதைச் சிறப்புவகையான் அறியப்படாத பொருள் வினாவென்றும், எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாதென்றும், உலகியற்கு மாறாக உரைத்தார். வரகு என்று ஆங்கிலேயனிடத்தும், புட்டினிக்கு (Sputnik) என்று கல்லாத் தமிழனிடத்தும், உரைப்பின் அவர்க்கு யாது தெரியும்? ஆகவே, முற்றும் அறியப்படாததும் சிறிது அறியப்பட்டதும் என இருவகைப்படும் பொருளிடத்தும் வினா நிகழும் என்றறிக.

     "வரகு யாது?" என ஓர் ஆங்கிலேயன் வினவுவது, அறியாப் பொருள் வினா. அது ஒரு கூலம் என்று தெரிந்தபின் அதன் இயல்பைப் பற்றி "வரகு என்னும் கூலம் யாது?" என வினவுவதே, அறிந்த பொருள் வினா. "இம் மரங்களுட் கருங்காலி யாது?" என்று வினவுதல் வழுவாம். இவ்வினா, "மரங்களுட் கருங்காலி யாது?", அல்லது "கருங்காலி மரம் யாது?" என இருத்தல் வேண்டும். "இம் மரங்களுள்" என்று சுட்டிக் கூறின், எது என்னும் வினாச்சொல்லே ஏற்றதாம். இங்ஙனமே பிறவும்.

அது, அஃது.

     அது, அஃது என்னும் இரு சொல்லும் ஒரே சொல்லின் இருவேறு வடிவாம். இங்ஙனமே, இது, இஃது, உது, உஃது என்பனவும்.
  "முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான"

(423)

என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி, அஃதாடை, இஃதிலை, உஃதீயம் என, உயிர்முதற் சொல்லான வருமொழிமுன் ஆய்தமிடைக்கொண்ட சுட்டுப்பெயரே அல்வழியில் நிலைமொழியாய் நின்று புணரல் வேண்டும்.
     இதற்கு நச்சினார்க்கினியர், "முன்னென்றதனான், வேற்றுமைக் கண்ணும் இவ்விதி கொள்க. அஃதடைவு. அஃதொட்டம் என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டா முருபு விரிக்க. இன்னும் இதனானே ஏனை இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க" என விலக்குக் கூறினார். இவ் விலக்குப்படியே,
  "விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்"

(162)

  "அஃதறி கல்லாதவர்"

(427)

என்னும் குறளடிகள் அமைந்துள்ளன. ஆயின், இவை வேற்றுமைத் தொகையாம்.
     இதனால், அஃது என்னும் ஆய்தம் பெற்ற வடிவம் பெரும் பான்மை எழுவாய் நிலையிலும், சிறுபான்மை பிற வேற்றுமைத்தொகை நிலையிலும், உயிர்முதற் சொல்லொடு நிலைமொழியாய் நின்று புணரும் என்பது பெறப்படும்.
     முற்றுகரம் இயல்பான உயிராதலால், அது என்னுஞ் சொல்,
     "உதாரணம்: இம்மரங்களுட் கருங்காலி யாது, நம்மெருது ஐந்தனுட் கெட்ட வெருதியாது, என வரும்." என்று உரை கூறினார் சேனாவரையர்.
  "எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்" 

(140)