பக்கம் எண் :

தமிழர் வரலாறு-227

இங்ஙனம், இயற்கையாகத்தொழில்பற்றி யிருந்த குலப் பாகுபாடு நிறம்பற்றிமாற்றி யமைக்கப்பட்டது. வரணம் = நிறம். வள்ளுதல்= வளைத்தல், வளைத்தெழுதுதல். வள் - வளை. வளைத்தல்= வளைத்தெழுதுதல், வண்ணப்படம் வரைதல், வரைதல்.

"உருவப் பல்பூ வொருகொடி வளைஇ" 

(நெடுநல்.113)

வள் - வண். வளை - வணை. வண் - வண்ணம் = 1. எழுத்து. 2.எழுதிய படம்.3. படமெழுதுங் கலவை. "பலகை வண்ண நுண் டுகிலிகை" (சீவக.1107 ).4. எழுதுங்கலவை நிறம், நிறம். "வான்சுதை வண்ணங் கொளல்" (குறள்.714). வண்ணமாலை = நெடுங் கணக்கு. . வர்ணமாலா.

வள் - வர் - வரி. வரிதல் = எழுதுதல். வரித்தல் = 1. எழுதுதல். "வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை" (சீவக. 2532). 2. ஓவியம் வரைதல். "வல்லோன் தைஇய வரிவனப் புற்ற வல்லிப் பாவை" (புறம்.33). 3. கோலஞ்செய்தல். "புன்னை யணிமலர் துறை தொறும் வரிக்கும்" (ஐங்குறு.117).

வரி=1. கோடு. "நுண்ணிய வரியொடு திரண்டு" (சீவக.1702). வரிமா = வரிப்புலி(வேங்கை). 2. தொய்யிற் கொடி வரை. "மணிவரி தைஇயும்"(கலித்.76).3. கை வரை. 4. எழுத்து, எழுத்தின் வரிவடிவு. 5. ஓவியம். 6. நிறம். "வரியணி சுடர்வான் பொய்கை" (பட்டினப்.38)

வர் - வரு - வருவு. வருவுதல் = வரைதல். வருவுமுள் = பொன்னத்தகட்டிற் கோடிழுக்கும் இருப்பூசி.

வரு - வரை. வரைதல் = எழுதுதல்.

வரி+அணம் = வரணம் = 1. எழுத்து, ஓவியம்.2. நிறம். 3. நிறம்பற்றிய நால்வகுப்பு.

வண்ணம் = வரணம். ஒ.நோ: திண்ணை = திரணை.

வண்ணம் = வண்ணி. வண்ணித்தல் = ஓவியம் வரைந்து கோலஞ் செய்தல் போல், ஒரு பொருளைப்பற்றி அழகாகப் புனைந்துரைத்தல். "வண்ணித்த லாவ தில்லா" (சீவக.2458).

வரணம் - வரணி. வரணித்தல் = அழகாகப் பலபடப் புனைந்துரைத்தல்.

வண்ணி - வண்ணனை. வரணி-வரணனை.

வண்ணம் = நிறம், நிறத்தால் வேறுபடும்பொருள்வகை, வகை (பொது), இனவகை, ஓசைவகை,ஓசைவகையால் ஏற்படும் செய்யுள்வகை (இருபதுதொல்காப்பிய வண்ணமும் நூறு அவிநய