பக்கம் எண் :

தமிழர் வரலாறு-231

1. வேதப்பொருளின் தாழ்வை மறைத்தல்.

2. வேதமோதிப்பிழைக்கும் தொழிலை ஆரியப் பூசாரிகட்கே உரிமையாக்கல்.

3. அவ்வக்காலஅறிவு வளர்ச்சிக் கேற்ப, வேண்டியபகுதிகளைஇடைச்செருகல்.

"ஆற்ற லழியுமென் றந்தணர்கள் நான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்"

என்பது, கோதமர்பெயரிலுள்ள திருவள்ளுவ வெண்பா மாலைச் செய்யுள்.

பொதுவாகஆரியர் என்று சொல்லப்படும் பிராமணர், முதற்கண்சிந்துவெளியிலிருந்து பின்னர்ப்பிரமவர்த்தத்திற்கும், அதன் பின் மத்தியதேசத்திற்கும் பரவினர். சரசுவதி யாற்றிற்கும்திருடத்துவதி யாற்றிற்கும் இடைப்பட்டதுபிரமவர்த்தம். சரசுவதி மறைந்த வினசனத்திற்குக்கிழக்கும், பிரயாகைக்கு மேற்கும், பனிமலைக்குத்தெற்கும், விந்தியமலைக்கு வடக்கும் உள்ளநாட்டுப்பகுதி மத்திய தேசம். இராமாயணக்காலத்தில் பிராமணர் மத்திய தேசக்கிழக்கெல்லை அடைந் திருத்தல் வேண்டும்.

 

சிந்து என்னும் பெயர்

ஆரியர்வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறியிருந்தமையாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல்தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர்அல்லது திராவிடர் மேலை யாசியாவிற்கும் அதன்பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்ப ராதலாலும்,சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்டதமிழ்ப்பெயராகவே யிருக்கலாம்.

சிந்துதல்= சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப்பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல். மழைதுளித்துளி யாகப் பெய்தலின், மழை பெய்தல் துளிசிதறுதல் என்று சொல்லப் படும்.

"தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி யூழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான்" 

(குறுந்.120)

என்பது முகில் துளிசிதறுதலையும்,

"அருவி யன்ன பருவுறை சிதறி
யாறுநிறை பகரு நாடனை'" 

(குறுந்.121)

என்பது ஆறு துளிசிதறுதலையும் குறித்தன.