பக்கம் எண் :

44தமிழர் வரலாறு-2

வரலாற்றையும் அறியார். தொல்காப்பியர்க்குப் பின் தமிழ் தளர்ந்ததேயன்றி வளர்ந்ததின்று.

சக்கணி (கூத்துவகை), சடங்கடி (வஞ்சனை), சடரி (சிதைவு), சடலை (வீண்செயல்), சக்கத்து (முத்துவகை), சக்கட்டம் (சக்கந்தம்), சட்டறம் (அறவுரை), சப்படி (வயிரக்குற்றம்), சராய் (காற்சட்டை), சல்லடம் (அரைக்காற் சட்டை), சல்ல வட்டம் (கேடகவகை), சமனை (ஓகவகை), சவதரி (தேடு) என்பனவும், இவை போன்ற பிறவுமே, தொல்காப்பியருக்குப் பின் தோன்றி யிருக்கலாம்.

தொல்காப்பியர் உலகவழக்கைச் செவ்வையாக ஆராயவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள.

(1) 

"மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்என்(று) 

(மரபு.1)

என்றதோடமையாது,

"சொல்லிய மரபின் இளமை தானே
சொல்லுங் காலை அவையல திலவே" 

(மரபு.26)

என்று வரையறையும் இட்டார் தொல்காப்பியர்.

கசளி, கயந்தலை, கரு, கருந்து, குஞ்சு, குருமன், செள், சேய், நாகு, புதல்வு (புதல்வன், புதல்வி), பொடி, முனி (யானைக் கன்று) முதலிய இளமைப் பெயர்கள் விடப்பட்டுப்போயின. இங்ஙனமே சில ஆண்பாற் பெயர்களும் பெண்பாற் பெயர் களும்.

(2) நீன் நீம் என்பன முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். இவற்றின் முந்தின நிலை நூன் நூம். நூம் என்பதன் வேற்றுமையடி நும். நீன் என்பதன் கடைக்குறை நீ. நீ என்பது இர் என்னும் பலர்பா லீற்றொடு சேர்ந்து நீயிர் நீவிர் என்றாகும். ஆயின், தொல் காப்பியரோ, நும் என்பதனின்று நீயிர் என்பதைத் திரித்தார்.

"அல்லதன்மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
அப்பால் மொழிவயின் இயற்கை யாகும்." 

(தொல்.326)

(3) ஒன்பது + பத்து என நிறுத்தித் தொண்ணூறு என்றும், ஒன்பது + நூறு என நிறுத்தித் தொள்ளாயிரம் என்றும் புணர்த்தார் தொல்காப்பியர். (தொல்.எழுத்து.குற்.40-58)