'செய்தி யாழின் பகுதியொடு
தொகைஇ' (தொல்.
அகத். 18)
'துறையமை நல்யாழ்த் துணைமையோர்
இயல்பே'
(தொல். களவு. 1)
என்று தொல்காப்பியரும்,
'யாழோர் மணவினைக் கொத்தனள்
என்றே' (மணிமே.
22 : 86)
என்று சீத்தலைச் சாத்தனாரும், யாழ்
என்னும் சொல்லை இசையென்னும் பொருளில் ஆண்டனர்.
'பாலை குறிஞ்சி மருதஞ்செவ்
வழியென நால்வகை யாழா நாற்பெரும்
பண்ணே'
என்று பிங்கல முனிவர் அச் சொல்லைப் ''பண்'' என்னும் பொருளில்
ஆண்டனர்.
நரப்புக் கருவியைக் குறித்து அச் சொல்
சங்க நூல்களிற் பயின்று வருதலானும், அற்றை உலக வழக்கிலும் அதற்கு அதுவே
பொருளாத லானும், அதற்குச் சான்றுகள் வேண்டுவதில்லை.
ஆகவே, 8ஆம் நூற்றாண்டிற்கும் 13ஆம்
நூற்றாண்டிற்கும் இடையில், இக்காலத்து வீணையைப் பெரிதும் ஒத்த செங்கோட்டியாழ்
இருந்ததென்றும்; அதற்கு வீணையென்னும் பெயரும் சிறுபான்மை வழங்கிற்றென்றும்; அப்
பெயர் ஆகுபெயராக மிடற்றிசையையும் உணர்த்தினதினால், இருபெயரும் இணைந்து வரும்
இடைக்கால நூற்பகுதி கட்கு உரையாசிரியர் உரை வரைந்தபோது, அவற்றுள் தென்சொல்லைக்
கருவிப் பெயராகவும் வடசொல்லை மிடற்றிசை குறித்ததாகவும் கொண்டனர் என்றும்;
செங்கோட்டி யாழினும் வேறாகச் சிறந்ததொரு நரப்புக்கருவி இந்தியாவிலேயே இதுவரை
யிருந்ததில்லை யென்றும்; யாழ், வீணை என்னும் இரு சொற்களும் ஒருபொருட் கிளவியாய்
ஒரே கருவியையே குறிக்குமென்றும்; இதனால் வீணை வாசிப்புச் செயன் முறையும்
அதுபற்றிய குறியீடுகளும் பொய்யாய்ப் போகா என்றும்
அறிந்துகொள்க.
2. 'யாழ் வடிவைப்பற்றி விபுலாநந்த
அடிகள் ஒரு வகையாகவும், திரு. வரகுணபாண்டியனார் மற்றொரு வகையாகவும்,
வரைந்துள்ளனர்.'
செங்கோட்டி யாழைப்பற்றி அடிகள்
வரைந்து காட்டியுள்ள படமே உண்மையானதாயின் வறுவாய், கவைக்கடை, உந்தி, ஒற்றுறுப்பு,
தந்திரிகரம், மாடகம், தகைப்பு, வணர் முதலிய உறுப்புகளெல்லாம் எங்கே? அவற்றைக்
கூறியுள்ள இளங்கோவடிகளும் அடியார்க்குநல்லாரும் பித்தரோ? அன்றிப்
பொய்யரோ?
மறைத்திரு. விபுலாநந்த அடிகள்
தமிழிசைத் தரத்தை அறியாத வர்கள் என்பது முன்னரே கூறப்பட்டது. அதையே உண்மை
யென்று
கடைப்பிடிக்க. |