மறுப்பு: முதன்முதல் யாழிற் பல
நரம்புகளைக் கட்டி மீட்டியபோது, கீழ்க் குரலோடொத்த மேற்குரலையும் அவற்றுக் கிடையிலுள்ள
பிற சுரங்களையுங் கண்டு ஏழிசைகளை யறிந்தார்களேயொழிய, மேற்கூறியவாறு மயில் பசு முதலிய
பறவை விலங்குகளின் ஓசைகளை ஒருங்கேயோ தனித் தனியோ கேட்டறியவில்லை. ஏழிசைகளைப்
புள்ளொடும் விலங்கொடும் இசைத்துக் கூறுவது, புள்நூலையும் குறிநூலையும் ஒட்டிய கற்பனைக்
கொள்கையாகவும் இருக்கலாம். இவ்வாறே, பிற்காலத்தாரும், எழுதீவு, எழுமுனிவர், எழுமரபு,
ஏழாறு, எழுதேவதை, எழுநிறம் முதலியவாக ஏழென்னுந் தொகைபெற்ற பொருள்களோ டெல்லாம் தத்தம்
விருப்பிற்கும் உன்னத்திற்கும் ஏற்றவாறு ஏழிசையை இசைத்துக் கூறுவாராயினர். இக் கூற்றெல்லாம்
இசைநூலோடு எள்ளளவும் தொடர்புற்றவல்ல.
குரலை மத்திமமாகக் கொண்டு, இருமொழி நூல்களிலும் கூறப்பட் டுள்ள புள் விலங்குகளை ஒப்புநோக்குமிடத்தும்
ரி க த நி என்னும் நாற் சுரங்கட் குரியவையே ஒத்திருக்கின்றன; ஏனை முச்சுரங்கட்கும்
ஒவ்வ வில்லை. குரலைச் சட்சமாகக் கொண்டு நோக்குமிடத்தும், இருமொழியிலும் பஞ்சமத்திற்குக்
கூறிய பறவை (குயில்) ஒத்திருக்கின்றது. இனி,
"சங்கு குயில்மயில் யானை புரவி
செங்கா லன்னம் காடையிவற் றோசை"
என்னுங் கல்லாட மேற்கோளில்,
வடநூல்களிற் கூறப்படாத மூன்றும் தமிழ் நூல்களிற் கூறப்படாத நான்குங் கூறப்பட்டுள்ளன.
இதனால். புள் விலங்குக் குறிப்பைக்கொண்டு ஒரு கொள்கையை நிறுவ முடியாதென்பது போதரும்.
(3) கூற்று:
"குரலது மிடற்றிற் றுத்த நாவினிற்
கைக்கிளை யண்ணத்திற் சிரத்தி னுழையே
இளிநெற் றியினில் விளரி நெஞ்சினில்
தார நாசியிவை தம்பிறப் பென்ப"
எனக் கூறியிருப்பதை
வடமொழி நூல்கள் கூறும் பிறப்பிடங்களோடு ஒப்பவைத்து நோக்குமிடத்து, குரல் துத்தம் கைக்கிளை
உழை இளி விளரி தாரம் என்னும் ஏழும் ம ப த நி ச ரி க வாம் என்பது தெளிவாகின்றது.
மறுப்பு:
மேற்கூறிய நூற்பாவில், குரலுக்குக் கூறிய இடந்தவிரப் பிற வெல்லாம் உடல்நூற்கும் ஒலிநூற்கும்
ஒவ்வாவென்பது, கண்ட அல்லது கேட்ட மட்டிலேயே தெள்ளத்தெளிவாம்.
இனி, முற்கால யாழெல்லாம் ஒருதொகை நரம்பினவும் ஒரு திறத்தவுமல்ல. சிலவும் பலவுமான
நரம்புகளைக் கொண்ட பல யாழ்களில், சில குரலிலும் சில உழையிலும் சில இளியிலும் சில
தாரத்திலும் தொடங்கின. உழையில் (மத்திமத்தில்) தொடங்கிய கோவையைச் சில பண்ணுக்குக்
குரன் முதலதாகக் கொண்டு வாசித்தனர். இதனால், ஒரே
|