நடுநிலையுதவியை இன்றுங் காணவேண்டின்,
நாட்டுப்புறத்தூர் ஒன்றில் அயலார் இருவரைச் சண்டையிட்டுக் காயம் பட்டு வீழச்செய்து
நண்பர் காண்க. 8. போர் செய்யும் இரு கட்சியாரும் நெருங்கிய
உறவாயின் ஒரு பக்கத்திலும் சேர முடியாதென்பதும், உறவுமுறை யிருந்தால்தான் ஒருவன்
பிறர்க்கு உணவளிக்க முடியும் என்பதும், நண்பர் கருத்து.
பாரதப் போரில் கலந்தவருட்
பெரும்பாலார் நெருங்கிய உறவினரே. போர் செய்யும் இரு படைகட்கும் உணவளிக்க வேண்டிய
நிலைமைகள், பெருஞ்செல்வம், வண்மை, அன்பு, நடுநிலைமை என்பவையே. பண்டைத் தமிழ்
வேளாளரின் விருந்தோம்புந் திறனையும், விருந்து என்னுஞ் சொல்லின் பொருளையும் நண்பர்
ஆய்ந்து பார்க்க.
9. தமிழின் சிறப்பையோ தமிழன் சிறப்பையோ
வடநூல்கள் கூறுவதில்லை. இதை நண்பர் நன்றாய் அறிந்திருந்தும் அறியாதவர்போல்,
மகாபாரத நூல் உதியஞ் சேரலாதன் வழங்கிய பெருஞ்சோற்றை ஏன் கூறவில்லை யென்று
கேட்கின்றார். 10. 'தங்கள் சேனைக்குச் சோறு கொடுக்கக்கூட இயலாத
அவ்வளவு வறியவர்களா பாண்டவரும் கௌரவர்களும்?' என்பது நண்பர் ஐய வினாக்களுள்
ஒன்று. பாண்டவர் வறுமையை,
'முந்தூர் வெம்பணிக் கொடியோன்
மூதூரி னடந்துழவர் முன்றி றோறு நந்தூரும் புனனாட்டின்
றிறம்வேண்டு நாடொன்று நல்கா னாகி லைந்தூர்வேண் டவையிலெனி லைந்தி
லம்வேண் டவைமறுத்தா லடுபோர் வேண்டு சிந்தூரத் திலகநுதற் சிந்து
ரத்தின் மருப்பொசித்த செங்கண் மாலே'
என்னும் பாரதப்
பாட்டாலறிக.
கௌரவர் செல்வரேனும் கடும் பெரும்போர் மூண்ட நிலையில் தம் உணவு
வசதியைப் பிறர்போற் கவனித்திருக்க முடியாது. இதை இழவு விழுந்த பெருஞ் செல்வர்
வீட்டிலும் ஏனை யுறவினர் உணவளித் துதவுவதைக் கண்டு தெளிக.
11. 'இருதரத்தார்
போர் செய்யும்போது, இரண்டு படைக்கும் சோறு அளித்த செய்தி உலகத்தில் யாண்டும்
கேட்டதும் இல்லை; கண்டதும் இல்லை' என்கிறார் நண்பர். நண்பர் கண்டதில்லை
யெனினும் முடிநாக ராயரும் இளங்கோவடிகளும் வழிவழி வந்த உரையாசிரியர் பலரும் கூறக்
கேட்டிருக்கின்றாரே! |