பக்கம் எண் :

156தமிழகம்

என்னும் குறளால் சடைபுனைதலும் மழித்தலும் தாபதருக்கு இயல்பு என விளங்குகின்றது. மழித்தல் புத்த சமய வழக்குப் போலும்.

3. தமிழர் சமயம்

     தமிழ்மக்கள் தொன்மை தொட்டு கைக்கொண்டு வரும் சமயம் சைவமேயாம். புத்த சமயம் தலையெடுப்பதன்முன் சைவ மதமே இந்தியா இலங்கை முழுமையும் பரவியிருந்தது. கி. மு. 543இல் வட தேயத்தினின்றும் இலங்கையை அடைந்த விசயனின் மதம் சைவம் என இலங்கைச் சரித்திரத்திற் படிக்கின்றோம். விசயனுக்குப் பின் இராச்சியம் எய்திய மன்னர்கள் தம்பெயரோடு சிவன் என்னும் பெயரையும் வைத்துச் சிறப்பித்தனர். விசயனுடைய வருகைக்குப் பன்னெடுங் காலத்துக்குமுன் நிகழ்ந்த பாரதம் இராமாயணத்திற் சொல்லப்படும் அருச்சுனன், அசுவத்தாமன், இராமன் முதலிய வீரர்கள் சிறந்த சிவபக்தர்கள் என அறிகின்றோம்.
"ஏர்தருமே ழுலகேத்த வெவ்வுருவுந் தன்னுருவா
யார்கலிசூழ் தென்னிலங்கை யழகமர்வண் டோதரிக்கு
பேரரு ளின்பமளித்த பெருந்துறை மேயபிரானைச்
சீரியவா யாற்குயிலே தென்பாண்டிநா டனைக்கூவாய்"
     என மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திற் கூறியிருக்கின்றார். இராமாயண காலத்துக்கு முற்பட்ட சிங்கன், சூரன், தாரகன், காசிபன் முதலானோரும் சிவமதத்தவர்களே.
     "தென்னாடுடைய சிவனே போற்றி" பாண்டி நாடே பழம்பதி யாகவும்" "பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்" "தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை" என மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்திருக்குமாற்றான் தென்னாட்டிற் றொன்மையே தமிழ்மொழியும் சிவநெறியும் உண்டென விளங்கும்.