பக்கம் எண் :

180தமிழகம்

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
ஒளிறுவா ளருஞ்சம முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. 

(புறம்)

     இப் பாட்டால் அக்காலத்து வீரத்தாயரது மனநிலை இத்தகையதென்பது வெளிப்படும். மற்றொரு வீரத்தாயைப்பற்றி பூங்கணுத்திரை என்னும் பெண்புலவர் பின்வருமாறு கூறுகின்றார்:
மீனுண் கொக்கின் றூவி யன்ன
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்னு முவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை யலம்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. (புறம்: 277)
     (இ - ள்) கொக்கின் இறகுபோல நரைத்த கூந்தலை யுடைய முதியவள் தன் புதல்வன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் மடிந்தானென்னுஞ் செய்தி கேட்டுத் தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் அதிக மகிழ்ச்சியடைந்தாளென்பது. அதனால் அக் காலத்தே வீரத்தாயாரான பெண்டிர், தாம் புதல்வரைப் பெறுவது ஓர் அற்ப வீரச்செயலையேனும் அவரிடங் கண்டு மகிழ்தற்கே என்று கருதினரென்பதும், அவர் வீரச் செயலில் அப் பெண்டிர்க்கு மனமகிழ்ச்சியே யன்றித் துக்கமில்லையென்பதும் நன்கு விளங்கும். வீரத்தாய் ஒருத்தி தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்புகின்ற மாட்சியை ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்புலவர் வியந்தும் இரங்கியும் அடியில் வருமாறு கூறுகின்றார்:
கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதில் மகளி ராதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்துஒழிந் தனனே
நெருநல் உற்ற செருவிற் கிவள் கொழுநன்
பெருநிரை விலங்கி ஆண்டுப் பட்டனனே