தமிழ் தமிழ் என்னும் சொல் மொழிக்குப் பெயர் மட்டுமல்லாமல் இனிமை நீர்மை என்னும் பொருள்களையும் உணர்த்தும்.1 இலக்கியங்களில் தேனுறை தமிழ்2 "தமிழ் தழீ இய சாயல்"3 எனத் தமிழ் இனிமை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இச்சொல் இனிமையை உணர்த்தற்குரிய காரணம், அதன் மூலம் முதலியன அறிய முடியாதன. சிவன், ஞாயிறு, முருகன் முதலிய கடவுளர்களோடும் தமிழர் மதத்தோடும் தமிழ் தொடர்புடையதென்பது தமிழ் நாட்டில் வழங்கும் பழைய ஐதீகம். இவ்வைதீகம்பற்றியே, "தென்மொழியை உலகமெலாந்தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்" "செந்தமிழ்ப் பரமாசிரியனாகிய முருகக் கடவுள் அகத்தியருக்குத் தமிழ் அறிவுறுத்தினார்" என்பன போன்ற வாக்கியங்கள் எழுந்தன. "சந்தனமும் புழுகுந் தண்பனி நீருடனே கொந்தலர் சண்பகமுங் கொண்டு வணங்கினேன் வந்திடும் வல்வினைநோய் மாற்றுவ துன்பதமே செந்தமி ழாகரனே சிவசிவ சூரியனே." (பழைய பாடல்) "அசலே சுரர்பத் திரனே குணதிக் கருணோ தயமுத் தமிழோனே" (திருப்புகழ்) "கள்ளென் றெறிக்குஞ் சுடரோன்பால் தோன்றியுயிர் உள்ளம் துலக்கி யுலாவலின்-தெள்ளுபுகழ்ப் பண்டைப் பெரியார்தாம் பைந்தமிழை ஒண்டமிழ் ஒண்டமி ழென்மனார் போந்து"4 1. "இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும்" (பிங்கலம்). 2. கல்லாடம். 3. சிந்தாமணி. 4. மாகறல் கார்த்திகேய முதலியார் மொழிநூலிற் கண்டது. இவர் தாமம் என்னும் ஞாயிற்றைத் குறிக்கும் சொல்லினின்றும் தமிழ் தோன்றிற்றென்பர். |