பார்ப்பார் எல்லாத் தேசங்களிலும் ஆலயங்களில் கடவுளுக்குப் பலிசெலுத்தும் குருமார் இருந்தனர். அவ்வகையினர் தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். இவர்கள் பார்ப்பார் எனப்பட்டனர். கோயில் தொடர்பான கருமங்களைப் பார்த்தலின் இப்பெயர் அவர்களுக்கு இடப்பட்டிருக்கலாம். கடவுள் வழிபாட்டினும் பிறவகையினும் இவர்கள் பொது மக்களுக்கு அறிவுகொளுத்திவந்தனர். இம்முறையில் இவர்கள் மக்களின் புரோகிதருமானார்கள். புரோகிதம் என்பது புர என்னும் அடியாகப் பிறந்ததாகலாம். புரோகிதனாகிய பார்ப்பானே அகப்பொருட்டுறையில் வரும் பார்ப்பனப் பாங்கனாவன். புரோகிதன் அரசனது உறுதிச் சுற்றங்களுள் ஒருவனாகவும் இருந்தான். தொல்காப்பியத்தில், "நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க்குரிய," எனக் கூறப்படும் அந்தணர், துறவிகளாய் இடம் விட்டு இடம் செல்லும் துறவோராவர். இங்கு நூலெனக் கூறப்பட்டது பொத்தகக் கட்டை இது: 1 " பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும் மானுரி மடியு மந்திரக் கலப்பையும் கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்" (உதயணன் கதை) என்பதால் நனி விளங்கும். 1. கிழிந்த சிதாஅ ருடுத்து மிழந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினா தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் |