கீழைச்சாளுக்கிய இளவரசன் விசயாதித்தியனுக்கு அரசுரிமை தந்தான். அரசுரிமைக்குரிய மற்றொரு இளவரசனான இராசேந்திரனுக்குச் சோழ இராசேந்திரன் தன் மகள் மதுராந்தகியை மணம் செய்து கொடுத்து, சக்கரக்கோட்டத்தில் அரசுரிமை தந்தான். இந்தச் சாளுக்கிய இராசேந்திரனே பின்னாளில் குலோத்துங்க சோழனானான். | கீழைச்சாளுக்கிய அரசுரிமையில் தலையிட்டு, அந்நாட்டை நேச நாடாக்கியது போலவே, மேலை சாளுக்கிய அரசுரிமையிலும் தலையிட வீரராசேந்திரனுக்கு ஒரு வாய்ப்புக்கிட்டிற்று. சோமேசுவரன் புதல்வர்கள் இரண்டாம் சோமேசுவரனும் விக்கிரமாதித்தியனும் அரசுரிமைக்குப் போட்டியிட்டனர். வீரராசேந்திரன் விக்கிரமாதித்தியனுக்கு உதவிசெய்தான். விசயவாடாப் போரில் அவன் பெரு வெற்றி கண்டு, விக்கிரமாதித்தனுக்குத் தென்பாதி அரசை வாங்கித் தந்தான். அவனுக்கே தன் மகளையும் மணம் செய்து தந்து நேசத்தை உறுதிப்படுத்தினான். ஹைதராபாதில் காடிகல் என்ற இடத்தில் இவ்வெற்றிக்கு அறிகுறியாக வீரராசேந்திரன் வெற்றித்தூண் நாட்டினான். | வீரராசேந்திரன் பிள்ளைகளில் மதுராந்தகன் என்ற ஒருவன் சோழேந்திரன் என்ற பட்டத்துடன் தொண்டை மண்டலத்திலும், கங்கைகொண்ட சோழன் என்ற மற்றொருவன் சோழபாண்டியன் என்ற பட்டத்துடன் பாண்டி நாட்டிலும் மண்டலீகர்களாக ஆண்டனர். வீரராசேந்திரன் காலத்திலும் பல சிற்றரசர்கள் கிளர்ச்சி செய்தனர். அவர்களுள் பொத்தப்பி அரசன், சேர அரசன், தாரா வருஷ மன்னன் தம்பி, பாண்டியன் சீவல்லபன் மகன் வீரகேசரி ஆகியவர்களை அவன் போரில் கொன்று வாகை சூடினதாக அறிகிறோம். | கடாரம் அல்லது சீர்விசய நாட்டிலும் அரசுரிமை கோரிய இரு இளவரசனுக்காகப் போரிட்டு, வீரராசேந்திரன் அவனைப் பேரரசனாக்க உதவினான். | | |
|
|